நெடுந்தீவு ஐவர் படுகொலை; 51 வயதானவர் கைது

நெடுந்தீவில் ஐந்து சிரேஷ்ட பிரஜைகளை படுகொலை செய்த குற்றச்சாட்டில் 51 வயதான பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நெடுந்தீவு இறங்குதுறைக்கு அருகில் உள்ள வீடொன்றில் இருந்து நேற்று (22) சனிக்கிழமை ஐவரின் சடலங்கள் மீட்கப்பட்டன.

லண்டன் பிரஜாவுரிமை பெற்ற வேலாயுதம்பிள்ளை நாகேந்திர ரத்தினம் (வயது 78) யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களான நாகநதி பாலசிங்கம் (வயது 82), பாலசிங்கம் கண்மணிப்பிள்ளை (வயது 76), கார்த்திகேசு நாகேஸ்வரி (வயது 83), மகாதேவன் (வயது 75) என்பவர்களே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

கனகம் பூரணம் (வயது 100) எனும் மூதாட்டி படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , குறித்த வீட்டில் இரு நாட்களாக தங்கியிருந்த நபர் தொடர்பில் கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் , வெளிநாடொன்றில் இருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட புங்குடுதீவு வாசியொருவரை நேற்று சனிக்கிழமை இரவு தொடக்கம் தீவிர விசாரணைக்கு உட்படுத்தி இருந்தனர்.

அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிபடையில் கொலையானவர்களின் சுமார் 25 பவுண் தங்க நகைகள், கொலையான ஒருவரின் வெளிநாட்டு கடவுச்சீட்டு மற்றும் அவரின் ஒரு சூக்கேஸ் அதனுள் அவரது உடுபுடவைகள், கொலையான ஒருவரின் கையடக்க தொலைபேசி உள்ளிட்டவை மீட்கப்பட்டுள்ளன.

அதனை அடுத்து அவரை நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், கொலைக்கான காரணம், கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்கள் என்பவை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

யாழ். விசேட நிருபர்


Add new comment

Or log in with...