அக்கரைப்பற்றில் 31 பேர் அடையாளம்; கல்முனை பிராந்திய பாடசாலைகளுக்கு பூட்டு

அக்கரைப்பற்றில் 31 பேர் அடையாளம்; கல்முனை பிராந்திய பாடசாலைகளுக்கு பூட்டு-Kalmunai Educationa District Schools Closed for One Week-31 COVID19 Cases Found in Akkaraipattu

- நேற்று சாய்ந்தமருதில் ஒருவர் அடையாளம்
- பெரிய நீலாவணையிலிருந்து பொத்துவில் வரை சந்தைகள் மூடல்

கிழக்கு மாகாண ஆளுநரின் ஆலோசனைக்கு இணங்க கல்முனை சம்மாந்துறை அக்கரைப்பற்று திருக்கோவில்  கல்வி வலயத்துக்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளையும் ஒரு வாரத்துக்கு மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்றில் 31 பேர் உள்ளிட்ட கல்முனை பிராந்தியத்தில் 32 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார்.

இன்று (26) மாலை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இவ்விடயத்தை கருத்திற் கொண்டு, கல்முனை கல்வி மாவடத்திற்குட்பட்ட, கல்முனை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று, திருக்கோவில், கல்வி வலயத்துக்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளையும் ஒரு வாரத்துக்கு மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண ஆளுநரின் ஆலோசனையின் அடிப்படையில், கல்முனைக் கல்வி மாவட்டத்தில் உள்ள கல்முனை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று, திருக்கோவில் ஆகிய நான்கு வலயங்கள் அடங்குகின்றன. இந்த 4 வலயங்களிலும் 252 பாடசாலைகள் உள்ளன. 6,139 ஆசிரியாகள் பணியாற்றுகின்றனர். ஒரு இலட்சத்து 41ஆயிரத்து 68மாணவர்கள் கல்வி பயில்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் பாடசாலைகளை மீளத்திறக்கும் திகதி பற்றி பின்னர் அறிவிக்கப்படும் என கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் அறிவித்துள்ளார்.

அத்துடன் பெரிய நீலாவணையிலிருந்து பொத்துவில் வரையான அனைத சந்தைகளையும் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்று சந்தையிலுள்ள கடை உரிமையாளர்களுக்கு  பீ.சீ.ஆர்  பரிசோதனை தற்போது  மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறித்த பீ.சீ.ஆர்  பரிசோதனை நேற்று எழுமாறாக மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதில் 31 பேர் அக்கரைப்பற்று பகுதியிலும் நேற்று சாய்ந்தமருதில் ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் அக்கரைப்பற்று சுகாதார பிரிவிலுள்ள பிரதேசங்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது  அம்பாறை மாவட்டத்தில்  வேகமாக கொரோனா தொற்று பரவியுள்ளதால் எதுவித பாகுபாடுமின்றி சட்டநடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பணித்துள்ளதாக, சுகுணன் தெரிவித்தார்.

சமுக இடைவெளி பேணாமை, முக்க்கவசம் அணியாமை, ஒன்றுகூடுதல் போன்ற நடவடிக்கைகள் மிக உன்னிப்பாக கண்காணிக்கப்படவுள்ளன.

ஆகவே தாங்களும் தங்களது உறவுகளும் பாதுகாப்பாக இருக்க கொரோனா தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதாக அவர் தெரிவித்தார். மேலும் அக்கரைப்பற்று நகர் பகுதிக்கு செல்வதை முற்றாக தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்படுகின்றீர்கள்.

அக்கரைப்பற்று பிரதேசத்தில் மேலும் 50பேருக்கு பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை ஆகிய பிரதேச செயலகங்களுக்குட்பட்ட பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் தனது கருத்தில் தெரிவித்தார்.

(பாறுக் ஷிஹான், காரைதீவு குறூப் நிருபர் சகா)


Add new comment

Or log in with...