குடும்ப உறவைப் பேணுவதன் முக்கியத்துவம்

குடும்ப உறவைப் பேணுவதன் முக்கியத்துவம்-Islam and Family Life

இஸ்லாம் வலியுறுத்தும் சமூக உறவுடன் சம்பந்தப்பட்ட இபாதத்துக்களில் குடும்ப உறவைப் பேணுவது மிக முக்கியமானது. சமூக உருவாக்கம் எனும் இஸ்லாமிய இலட்சியத்தை அடைய குடும்ப உறவு சீர்படுதல் இன்றியமையாததாகும். இவ் வகையில் நல்ல சமூக மாற்றத்தை ஏற்படுத்த நல்ல குடும்ப உறவுகளை ஏற்படுத்த வேண்டும். துரதிஷ்டவசமாக மார்க்க ஈடுபாடு உள்ள பலரிடம் கூட இன்றைய சமூக சூழல் இரத்த உறவை விட நட்பையும் இடையில் ஒட்டிக்கொண்ட உறவையும் முக்கியத்துவப்படுத்தும் நிலை தோன்றியுள்ளது. நட்புக்காகவும், இன்னும் பல தொடர்புகளுக்காகவும் நேரத்தையும், பணத்தையும் செலவிடத் தயாராகவுள்ள பலர் குடும்ப உறவுக்காக சில நிமிடங்களைக் கூட செலவிடத் தயாராக இல்லை.

நட்பும் ஏனைய உறவுகளும், நாமாகத் தெரிவு செய்பவை. இரத்த உறவு அல்லாஹ்வின் தெரிவாகும். இவன் உன் வாப்பா, இவன் உன் சாச்சா, இவன் மாமா, இவன் உன் சகோதரன் என்பது அல்லாஹ் செய்த தெரிவுகள். இந்தத் தெரிவுக்கு முக்கியத்துவம் கொடுப்பது மார்க்கக் கடமையும், ஈமானுடன் சம்பந்தப்பட்ட விடயமுமாகும்.

இரத்த உறவைப்பேணுவது வெறும் சமூகக் கட்டமைப்பிற்கு மாத்திரமுரியதல்ல. இஸ்லாமிய நோக்கில் இது ஈமானிய அம்சங்களில் ஒன்றாகும்.

ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள், 'யார் அல்லாஹ்வையும், மறுமை நாளையும், ஈமான் கொள்கின்றாரோ அவர் குடும்ப உறவைச் சேர்ந்து நடக்கட்டும்' என கூறினார்கள். (ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)

அல்லாஹ்வின் மீதும் மறுமையின் மீதும் ஒரு முஸ்லிம் கொண்டுள்ள ஈமானின் வெளிப்பாடுகளில் ஒன்றாகக் குடும்ப உறவைப் பேணி நடத்தலும் அமைந்துள்ளது.

இரத்த உறவு என்பது அல்லாஹ்வின் தெரிவாக இருப்பதால் அதனை ஏற்று மதிப்பதன் ஊடாக அல்லாஹ்வுடனான உறவு ஏற்படுகின்றது. மற்றொரு தடவை நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ் இரத்த உறவைப் பார்த்து 'யார் உன்னைச் சேர்ந்து நடக்கிறானோ நான் அவனைச் சேர்த்துக் கொள்வேன். யார் உறவைத் துண்டித்துக் கொள்கின்றானோ நான் அவனுடன் தொடர்பைத் துண்டித்து விடுவேன்' என்று கூறினான். (ஆதாரம் : புகாரி)

இதன்படி குடும்ப உறவைப் பேணுவது அல்லாஹ்வுடனான உறவைப் பேணுவதற்குச் சமமானதாக விளங்குவதைக் காணலாம்.

'இரத்த உறவு அர்ஷில் கொழுகப்பட்டுள்ளது. அது யார் என்னைச் சேர்ந்து நடக்கிறானோ அல்லாஹ் அவனைச் சேர்ந்து கொள்வான். யார் என்னைத் துண்டித்து நடக்கின்றானோ, அல்லாஹ் அவனைத் துண்டித்து விடுவான்' என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)

இந்த அறிவிப்பும் குடும்ப உறவைப் பேணுவதன் அவசியத்தை எடுத்துக்காட்டும் அதேவேளை, இதற்கு மாறாகச் செயற்படுவோரைக் கண்டிக்கவும் செய்வது கவனிக்கத் தக்கதாகும்.

அதேநேரம் இரத்த உறவுகளுடன் இங்கிதமாகவும், இதமாகவும் நடந்து கொள்வதும் சுவனத்தில் நுழைவிக்கத்தக்க சிறந்த செயற்பாடாகப் போற்றப்படுகின்றது.

ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து 'அல்லாஹ்வின் தூதரே! என்னைச் சுவனத்தில் நுழைவித்து நரகத்தை விட்டும் தூரமாக்கக் கூடிய ஒரு அமலை எனக்குச் சொல்லித் தாருங்கள்' என்றார். அதற்கு அண்ணலார், 'நீ அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும். அவனுக்கு எதையும் இணைவைத்து விடாதே! தொழுகையை நிலை நிறுத்து, ஸகாத்தும் கொடுத்துவா, குடும்ப உறவைப் பேணிக்கொள்' என்றார்கள். (ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)

சுவனம் செல்ல விரும்புபவர்கள் மேற்குறித்த அறிவிப்புகளுக்கு ஏற்ப குடும்ப உறவைப்பேண முன்வர வேண்டும்.

மேலும் இரத்த உறவைப் பேணுவதால், மறுமைப் பேறுகள் மட்டுமன்றி இம்மையிலும் இனிய பயன்கள் உள்ளதாக இஸ்லாம் கூறுகின்றது. இது தொடர்பில் நபி (ஸல்) அவர்கள் 'யார் தனக்கு றிஸ்கில் விஸ்தீரணத்தையும் நீண்ட ஆயுளையும் விரும்புகின்றாரோ அவர் அவர் இரத்த உறவைப் பேணிக்கொள்ளட்டும்' என்றார்கள். (ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)

சிலர் எவ்வாறுதான் நல்ல முறையில் நடந்து கொண்டாலும், குறைகண்டு கொண்டு தான் இருப்பர், குத்திப் பேசிக்கொண்டிருப்பர், இப்பகைவர்களுடனும் இணைந்து நடப்பதே சரியான இரத்த உறவைப் பேணும் முறையாகும். 'தன்னுடன் இணைந்து இருப்போருடன் சேர்ந்து நடப்பவன் இரத்த உறவைப் பேணுபவனல்ல.

உண்மையில் தன்னுடன் உறவைத் துண்டித்தாலும் உறவு பேணுவதே இரத்த உறவைச் சேர்ந்து நடப்பவனாவான்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் : புகாரி)

இதே நிலையை ஒரு தோழர் நபி(ஸல்) அவர்களிடம் இவ்வாறு முறையிட்டார்.

'எனக்கு சில உறவினர்கள் இருக்கின்றனர். அவர்களுடன் ஒட்டி நடந்தால் அவர்கள் வெட்டிச் செல்கின்றனர். நான் அவர் களுக்கு நன்மை செய்கின்றேன். அவர்களோ எனக்குத் தீமை செய்கின்றனர். நான் அவர்களுடன் கருணையுடன் நடந்து கொள்கின்றேன். அவர்கள் என்னுடன் கடுமையாக நடந்து கொள்கின்றனர்' என்றார். அதற்கு நபியவாகள், நீ கூறுவது போல் நீ நடந்து கொண்டால் அல்லாஹ்விடமிருந்து ஒரு உதவியாளர் உனக்கு நியமிக்கப்பட்டிருப்பார்' என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் : முஸ்லிம்)

எனவே, முடிந்தவரை அனைவரையும் நாம் அணுசரித்து, விட்டுக்கொடுத்து இணங்கிச் செல்ல முயல வேண்டும். இதுவே, உண்மை யான இரத்த பந்தமாகும்.

அதேவேளை முஸ்லிம் அல்லாத இரத்த உறவாக இருந்தாலும் அவர்களுக்குரிய அந்தஸ்த்தை வழங்கத் தயங்கக் கூடாது. இதில் இஸ்லாம் எவ்வளவு தூரம் விசாலமாகச் சிந்திக்கின்றது என்பதைப் பின்வரும் அறிவிப்பு உணர்த்துகின்றது.

'நீங்கள் நிச்சயமாக எகிப்தைக் கைப்பற்றுவீர்கள். அப்போது அவர்களுடன் மிக இங்கிதமாக நடந்து கொள்ளுங்கள். ஏனெனில், உங்களுக்கு அவர்களுடன் குடும்ப உறவும் – திருமண உறவும் உள்ளது' என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் : முஸ்லிம்)

அதாவது இஸ்மாயில்(அலை) அவர்களின் தாயார் ஹாஜரா (அலை) அவர்கள் கிப்தி இனத்தவராவார். நபி(ஸல்) அவர்களின் மகன் இப்றாஹிமின் தாய் மரியதுல் கிப்தியாவும் இந்த இனத்தைச் சேர்ந்தவர்களாவார்கள்.

இதனையே நபி(ஸல்) அவர்கள் மேற்குறித்த நபிமொழியில் குறிப்பிட்டார்கள். தனக்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஹாஜரா (அலை) அவர்களின் குடும்ப உறவுக்கு முக்கியத்துவம் கொடுத்து எதிர்காலத்தில் நடந்து கொள்ளுமாறு நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் என்றால் எமது உடன் பிறப்புக்கள், எமது பெற்றோரின் உடன் பிறப்புக்கள், அவர்களுடைய குழந்தைகளுடன் நாம் எவ்வளவு இங்கிதமாக நடந்துகொள்ளப் பணிக்கப்பட்டுள்ளோம் என்பது தௌிவாகின்றது.

எனவே, குடும்ப உறவைப் பேணி நடந்து அல்லாஹ்வின் அருளையும் அன்பையும் பெறுவதோடு குடும்ப உறவைத் துண்டித்தவன் சுவனம் நுழைய மாட்டான் என்ற அண்ணலாரின் எச்சரிக்கைக்கு அப்பாற்பட்ட கூட்டத்தில் இணைந்து கொள்ள இப்போதே முயற்சிப்போம்.


Add new comment

Or log in with...