இலங்கை கடலுக்குள் அத்துமீறி நுழைந்த 5 படகுடன் 24 இந்திய மீனவர்கள் கைது

- இவ்வருடத்தில் இதுவரை 35 படகுகளுடன் 252 இந்திய மீனவர் கைது

கடற்படை மற்றும் கரையோர பாதுகாப்பு திணைக்களம் இணைந்து மேற்கொண்ட விசேட நடவடிக்கையில், வடகடலில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 5 இந்திய மீன்பிடி படகுகளில் இருந்த 24 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (28) மாலை வடக்கு கடலில் இலங்கை கடற்படை மற்றும் இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களம் இணைந்து மேற்கொண்ட விசேட நடவடிக்கையில், சர்வதேச கடல் எல்லையை மீறி, இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்ட 5 இந்திய மீன்பிடி படகுகளில் இருந்த 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம், காரைநகர், கோவிலன் கலங்கரை விளக்கத்திற்கு அருகிலுள்ள கடல் எல்லையில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட 5 இந்திய மீன்பிடி படகுகளும், படகில் இருந்த 24 இந்திய மீனவர்களும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் மயிலிட்டி மீன்பிடி விசாரணைண அலுவலகத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, கடற்படை தெரிவித்துள்ளது.

அதற்கமைய, இந்நடவடிக்கையின் மூலம் 2022ஆம் ஆண்டில் இதுவரை நாட்டின் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 35 இந்திய மீன்பிடி படகுகளுடன் 252 இந்திய மீனவர்களை கடற்படையினர் கைது செய்து மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக உரிய திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளதாக, கடற்படை தெரிவித்துள்ளது.

மேலும், வெளிநாட்டு மீனவர்கள் நாட்டு கடற்பரப்பை அத்துமீறி மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளினால் உள்ளுர் மீனவ சமூகத்திற்கு ஏற்படும் பாதிப்பையும், கடல்சார் சூழலின் பல்லுயிர் சேதத்தையும் கட்டுப்படுத்தும் நோக்கில் கடற்படையினர் தொடர்ந்தும் இவ்வாறான நடவடிக்கைகளை தொடர்ந்தும் மேற்கொள்ளுமென சுட்டிக்காட்டியுள்ளது.


Add new comment

Or log in with...