இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடிப்பு

14 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்து மீன் பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீன்பிடி படகொன்று வடகடலில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இலங்கை கடல் எல்லைக்குள் அனுமதியின்றி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட மீன்பிடிப் படகொன்றை (16) கடற்படையினர் 14 மீனவர்களுடன் கைப்பற்றினர். யாழ்ப்பாணம் வெற்றிலைக் கேணி மாமுனி பிரதேசத்தை அண்மித்த கடற்பரப்பில் வைத்தே மீன் பிடிப் படகை, கடற் படையினர் கைப்பற்றியுள்ளனர்.

கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இந்திய மீன் பிடிப்படகு மற்றும் படகிலிருந்த 14 இந்திய மீனவர்கள் காங்கேசன்துறை துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் மயிலிட்டி கடற்றொழில் விசாரணை காரியாலயத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இந்நடவடிக்கையின் மூலம் 2022 ஆம் ஆண்டு இதுவரை முப்பது இந்திய மீன் பிடிப்படகுகளுடன் 228 இந்திய மீனவர்களையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

மேலும் வெளிநாட்டு மீனவர்கள் இலங்கையின் கடல் எல்லையில் அத்துமீறி மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளால் உள்ளூர் மீனவர்களுக்கும் கடல் சார் சூழல் பல்லுயிர்களுக்கும் பாதிப்புக்கள் ஏற்படுகின்றன.இவற்றைத் தடுப்பதற்காக கடற்படையினர் எதிர்காலத்திலும் இவ்வாறான நடவடிக்கைகளை தொடர்ந்தும் மேற்கொள்ளவுள்ளனர்.

 


Add new comment

Or log in with...