Friday, August 14, 2015 - 4:15pm
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் சுசில் பிரேமஜயந்த மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் அநுர பிரியதர்சன யாபா ஆகியோரை அவர்களது செயலாளர் பதவியிலிருந்து நீக்குவதாக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (14) உத்தரவிட்டுள்ளது.
அக்கட்சிகளின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முடிவுக்கமையவும் கட்சியின் யாப்பிற்கமைய இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, ஐ.ம.சு.முவின் தற்காலிக செயலாளராக பேராசிரியர் டப்ளியூ.ஏ. விஷ்வ வர்ணபாலவும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தற்காலிக செயலாளராக துமிந்த திஸாநாயக்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் துமிந்த திஸாநாயக்க மற்றும் விஷ்வ வர்ணபால ஆகியோர் தங்களது பதவிகளில் எவ்வித தடங்கலுமின்றி கடமையாற்றுவதற்கான அனுமதியை வழங்குமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றத்திடம் கோரியதற்கமைய, அவர்களுக்கு அவ்வனுமதியை வழங்குவதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மேலும் குறித்த அனுமதி எதிர்வரும் ஓகஸ்ட் 28 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Add new comment