மைத்திரியின் பணிக்குழாம் பிரதானிக்கு விதிக்கப்பட்ட தண்டனை உயர் நீதிமன்றத்தினால் உறுதி

- சீனித் தொழிற்சாலை இரும்பை வழங்க ரூ. 2 கோடி இலஞ்சம்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிக்குழாம் பிரதானி கலாநிதி ஐ.எச்.கே. மஹானாம, அரச மரக் கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் பி. திஸாநாயக்க ஆகியோருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பை உயர் நீதிமன்றம் இன்று (11) உறுதி செய்துள்ளது.

ரூ. 2 கோடி இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு தொடர்பில் விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை எதிர்த்து உயர் நீதிமன்றில் மேன்முறையீடு செய்யப்பட்டிருந்த நிலையில், குறித்த குற்றச்சாட்டை உயர்நீதிமன்றம் உறுதி செய்யதுள்ளதோடு, கொழும்பு மேல் நீதிமன்றத் தீர்ப்பான சிறைத் தண்டனையை அமுல்படுத்துமாறும் உத்தரவிட்டுள்ளது.

கந்தளாய் சீனி தொழிற்சாலைக்கு சொந்தமான இரும்புகளை இந்திய நிறுவனம் ஒன்றிற்கு வழங்குவது தொடர்பில் ரூபா 54 கோடியை இலஞ்சமாக பெறுவதற்கு முயன்றுள்ளதோடு, அதற்கான முற்பணமாக ரூபா 2 கோடி பணத்தை, கொழும்பிலுள்ள சொகுசு ஹோட்டல் ஒன்றில் வாகன தரிப்பிடத்தில் வைத்து கைமாற்றிய போது, இலஞ்ச ஊழல் திணைக்கள அதிகாரிகளால் அவர்கள் கடந்த 2018 ஆம் ஆண்டு மே 03ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.

அதற்கமைய, ரூபா 2 கோடி (ரூ. 20 மில்லியன்) இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு தொடர்பில் அவர்களுக்கு எதிராக மூவரடங்கிய கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில் கடந்த 2019 டிசம்பர் 19ஆம் திகதி, அவர்கள் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதற்கமைய, ஜனாதிபதி பணிக்குழாமின் முன்னாள் பிரதானி கலாநிதி ஐ.எச். குசும் மஹானாமவுக்கு, 13 குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்த நீதிபதிகள் குழாம், இலஞ்சமாக பெற்ற ரூபா 2 கோடி பணத்தையும் அரசாங்கத்திற்கு செலுத்துமாறும் உத்தரவிட்டது. அத்துடன் ரூபா 65,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

அரச மர கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பியதாஸ திஸாநாயக்கவுக்கு 11 குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 12 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்த நீதிமன்றம், ரூபா 55,000 அபராதத்தையும் செலுத்துமாறும் உத்தரவிட்டது.


Add new comment

Or log in with...