எந்தவொரு அனுமதியும் பெறாமல் பூப்பனித நீராட்டு விழா விருந்தை நடத்திய குடும்பத்தவர்கள் உட்பட 48 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொவிட் தொற்று , உயிரிழப்புக்கள் அதிகரித்ததனையடுத்து எந்தவொரு விழாக்களும் நிகழ்வுகளும் நடத்த முடியாதெனவும் அவ்வாறு நடத்தும் பட்சத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்களே பங்கு பெற முடியும் என சுகாதார பிரிவினரால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
இந்நிலையில், நோர்வூட் பகுதியில் நேற்றையதினம் (14) பூப்புனித நீராட்டு விழா விருந்தொன்று சுகாதார பிரிவினரின் அனுமதி பெறாமலேயே நடத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சுகாதார அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய அவ்விட்டத்திற்கு சென்ற அதிகாரிகள், குடும்பத்தவர் உள்ளிட்ட நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் 48 பேரை எதிர்வரும் 28ஆம் திகதி வரை அவர்களது வீடுகளிலேயே சுயதனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்ததுடன், அதிகளவான உயிரிழப்புகளும் இடம்பெற்றுள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
(நோட்டன் பிரிட்ஜ் நிருபர் - எம். கிருஸ்ணா)
Add new comment