மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டிகள் 4 நாள் சோதனை

மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டிகள் 4 நாள் சோதனை-4 Days Special Operation-Motorcycles Three Wheeler Checking

- தினமும் 5 - 6 பேர் விபத்தில் பலி
- புத்தாண்டு கால விபத்துகளை குறைக்க நடவடிக்கைகள்

நாளாந்தம் அதிகரித்து வரும் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி விபத்துகள் மூலம் ஏற்படும் உயிரிழப்பைக் குறைக்கும் வகையில், இன்று (31) முதல் நாடு முழுவதும், நான்கு நாட்களுக்கு, மோட்டார் சைக்கிள்களை பரிசோதனை செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி விபத்துகள் காரணமாக தினமும் ஐந்து முதல் ஆறு உயிர்கள் வரை காவு கொள்ளப்படுவதாக, அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.

இதன்போது மோட்டார் சைக்கிள்கள், முச்க்கர வண்டிகளின் தரம் மற்றும் அவற்றின் இயங்கும் நிலை தொடர்பில் ஆராயப்படவுள்ளது.

இந்த நடவடிக்கையின் நோக்கம், மோட்டார் சைக்கிள்கள் அல்லது முச்சக்கர வண்டிகளின் சாரதிகளை சிரமப்படுத்துவது அல்ல எனத் சுட்டிக் காட்டியுள்ள அவர், மாறாக அவர்களின் உயிர் பாதுகாப்பு தொடர்பில் அவர்களுக்கு விழிப்பூட்டி, அது தொடர்பில் அதிக கவனம் செலுத்தும்படி அவர்களுக்கு அறிவிப்பதாகும் என, அஜித் ரோஹண மேலும் கூறுகையில்,

இதேவேளை, புத்தாண்டுக் காலங்களில் வீதி விபத்துக்களை கட்டுப்படுத்தும் வகையில் நாளை, முதலாம் திகதி முதல் விசேட போக்குவரத்து திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அதன் ஒரு நடவடிக்கையாக தூரப் பிரதேச பஸ் சேவைகளில் சிவில் உடை தரித்த பொலிஸ் அதிகாரிகளை ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...