- ஒரே கூரையின் கீழ் கட்டுமான மூலப்பொருட்கள் மற்றும் சேவைகள்
பேலியகொ C City பல் பொருள் அங்காடி நிலையத்தின் நிர்மாணப் பணிகள் நேற்று (18) மீண்டும் கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டடப் பொருட்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் இந்திக அநுருத்த மற்றும் பிரதமர் அலுவலக தலைமை அலுவலகர் யோஷித ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையின் கீழ் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை அறிக்கைக்கு ஏற்ப, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு இணங்க, பிரதமர் அலுவலக அதிகாரி யோஷித ராஜபக்ஷவின் முழு மேற்பார்யின் கீழ் கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டடப் பொருட்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் கீழ் இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தினால் இந்த நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கடந்த 2012ஆம் ஆண்டில் (2012.11.26) மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் 14 ஏக்கர் நிலப் பரப்பில் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், கடந்த ஆட்சிக் காலத்தில் இத்திட்டம் கைவிடப்பட்டிருந்தது.
C City பல் பொருள் அங்காடி நிலைய நிர்மாணத்தின் பின்னர், வாடிக்கையாளர்கள் கட்டுமானத் துறையின் அனைத்து மூலப் பொருட்கள் மற்றும் சேவைகளை ஒரே இடத்தில் பெற முடியும்.
இவ்வேலைத் திட்டத்தின் ஆரம்ப விழா மற்றும் பல் பொருள் அங்காடி நிலையத்தின் உத்தியோகபூர்வ வலையத்தளமான www.city.lk உம் நேற்று (18) திறந்து வைக்கப்பட்டது. இங்குள்ள பல கடைகளும் இன்று உத்தியோகபூர்வமாக கடை உரிமையாளர்களிடம் ஒப்பந்த அடிப்படையில் ஒப்படைக்கப்பட்டது.
இவ்வைபவத்தில் தேசிய இயந்திர நிலையத்தில் சேவையை நிறைவு செய்த 50 ஊழியர்களுக்கு ரூபா. 233 இலட்சமும் நன்கொடை சன்மானமாக வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் சுதேச வைத்திய முறைகளின் மேம்பாடு, கிராமிய மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலைகள் அபிவிருத்தி மற்றும் சமூக சுகாதார இராஜாங்க அமைச்சர் சிசிற ஜயக்கொடி, பாராளுமன்ற உறுப்பினர் உபுல் மகேந்திர ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக, பேலியகொடை நகர சபை மேயர் கே.டீ. ஆனந்த, வீடமைப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர் கீர்த்தி ரஞ்சித் அபேகுணவர்தன, இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரத்னசிறி கலுபஹன மற்றும் அரச அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
Add new comment