உலகிலுள்ள எல்லா நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் ஏற்ற தாழ்வுகள் காணப்பட்டாலும் இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான நட்புறவு நிலையானதாக உள்ளது என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், மொஸ்கோவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.
இவ்வைபவத்தில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான நட்புறவு பல வழிகளிலும் விதிவிலக்கானது என்றும் இந்த உறவில் ஏற்றத்தாழ்வுகள் இல்லை என்றும் தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் நன்மை பயக்கும் ஒத்துழைப்பை விரிவுபடுத்த பங்களிக்குமாறு மொஸ்கோவிலுள்ள இந்திய சமூகத்தினரைக் கேட்டுக் கொண்ட வெளிவிவகார அமைச்சர், கடந்த 70–80 ஆண்டுகளில், உலக அரசியலில் இந்தியாவும் ரஷ்யாவும் நிறைய மாற்றங்களைச் சந்தித்துள்ளன என்றார்.
பாதுகாப்பு, அணுசக்தி மற்றும் விண்வெளி என்பவற்றில் அதிக நம்பிக்கை கொண்ட நாடுகளுடன் ரஷ்யா முன்னெடுக்கும் ஒத்துழைப்பு அதன் தரத்தைப் பிரதிபலிக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.