வெள்ள அனர்த்தத்தினால் முல்லைத்தீவு மாவட்டம் பாண்டியன்குளம், மற்றும் துணுக்காய் கமநல சேவை நிலையத்துக்குட்பட்ட மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
வவுனிக்குள நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழான பாண்டியன்குளம் கமநல சேவை நிலையத்துக்குட்பட்ட பகுதிகளிலுள்ள விவசாயிகள் வெள்ளத்திற்கு முன்னர் நோய் தாக்கங்களினால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் அவற்றிலிருந்து விவசாயத்தை பாதுகாத்த போதிலும் மழை வெள்ளத்தினால் பயிர்கள் அழிவடைந்து நஷ்டத்தை சந்தித்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
அரசாங்கம் தமக்கான இழப்பீட்டை தந்து உதவ வேண்டுமென விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இம்முறை துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்குப் பகுதிகளில் 14,590 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் வேளாண்மையை செய்து வருகின்றனர்.
இதேவேளை துணுக்காய் கமநல சேவை நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் இம்முறை 7840 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் வேளாண்மை செய்த போதிலும் 2300 ஏக்கர் வயல் நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கி அழிவடைந்திருப்பதாக துணுக்காய் கமநல சேவை நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர் விஜயரத்தினம் வசந்தன் தெரிவித்தார்.
இதே வேளை 3800 ஏக்கர் வயல் நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கி காணப்பட்டிருந்ததுடன் அழிவடைந்தும் இருப்பதாக பாண்டியன்குளம் கமநல சேவை நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர் தனபாலசிங்கம் குணாளன் தெரிவித்தார்.
(ஓமந்தை விசேட நிருபர்)