வீடமைப்பு திட்டம் என்பதும் அதற்கான நிதி ஒதுக்கீடும் நாடளாவிய பிரச்சினையாக உள்ளதால் அது தொடர்பில் ஆராயப்பட்டு நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெவித்துள்ளார்.
நேற்று வியாழக்கிழமை (28) யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கடற்றொழில் அமைச்சரும் யாழ். கிளிநொச்சி மாவட்டங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது. இதன்போது நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் வீட்டுத்திட்ட பயனாளர் தொடர்பில் ஆராயப்பட்டது. இதன்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வீட்டுத் திட்டங்களின் முன்னேற்ற நகர்வுகள் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு ஆராயப்பட்டது. இந்நிலையில் 05 மில்லியனுக்கே வீடு கட்ட முடியாதென குறை கூறிக்கொண்டிருக்கும் மாவட்டமாக யாழ்ப்பாணம் இருக்கின்றது என வடக்கு மாகாண ஆளுநரும் யாழ் கிளிநொச்சி மாவட்டங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவருமான திருமதி சாள்ஸ் குற்றம் சாட்டியுள்ளார். குறிப்பாக ஒரு மில்லியன் திட்டத்துக்கு 403 பயனாளரும் 06 இலட்சம் திட்டத்துக்கு 101 பயணாளரும் கோரியுள்ளதாக துறைசார் அதிகாரிகளால் சுட்டிக்காட்டப்பட்டது.
இதில் ஆறு இலட்சம் திட்டம் என்பது தற்போதைய சூழ் நிலையில் சாத்தியமானதென்று அல்ல. இதனை குறைந்தது பதினைந்து இலட்சமாக உயர்த்தவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டதுடன் அதுவரை இவ்விரு திட்டங்களுக்கும் அனுமதி வழங்க கூடாதெனவும் வலியுறுத்தப்பட்டது.