தாய்வானின் முக்கியத்துவம் மிக்க தேர்தல்கள் நடைபெறவிருக்கும் சூழலில் சீனாவுடன் நெருக்கமான உறவுகளைப் பேணிவரும் எதிர்க்கட்சி வேட்பாளர்களை ஆதரிக்கும் பீஜிங்கின் முயற்சிகள் குறித்து தாய்வான் உளவுத்துறையினர் கவலை தெரிவித்துள்ளனர்.
23.5 மில்லியன் மக்கள் வாழும் தாய்வானில் ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தல்கள் ஜனவரி மாதம் நடுப்பகுதியில் நடைபெறவுள்ளன. இந்த சூழலிலேயே தம்முடன் நெருக்கமான உறவுகளைப் பேணும் எதிர்க்கட்சி வேட்பாளர்களை ஆதரிக்கும் முயற்சிகளை சீனா முன்னெடுத்துள்ளது. இதன் நிமித்தம் தவறான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாக தாய்வான் உளவுத்துறையை சி.என்.என். மேற்கோள் காட்டியுள்ளது.
இராணுவ ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் அழுத்தங்களை மேற்கொண்டு வரும் சீனா, ஜனநாயக ரீதியில் நடைபெறவிருக்கும் தேர்தலிலும் செல்வாக்கு செலுத்த முயற்சிப்பது எவ்விதத்திலும் நியாயப்படுத்தக் கூடியதல்ல.
அது தாய்வானின் ஜனநாயக விழுமியங்களைப் பலவீனப்படுத்தவே வழிவகுக்கும். தாய்வான் சிக்கலான புவிசார் அரசியல் சவால்களை எதிர்கொண்டுள்ளதால் தவறான தகவல்களுக்கு எதிராகப் போராடுவது அதன் ஜனநாயக ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் முக்கிய அம்சமாக விளங்குகிறது என்றும் அத்துறையினர் தெரிவித்துள்ளனர்.