டெங்கு காய்ச்சலுக்குள்ளான இளைஞன், யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியை சேர்ந்த 23 வயதான இளைஞனே உயிரிழந்துள்ளார். டெங்கு காய்ச்சலுக்குள்ளாகி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து, மூளைச்சாவடைந்திருந்தார்.
தொடர்ந்து இளைஞனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த போதும் , சிகிச்சை பலனின்றி நேற்று புதன்கிழமை காலை உயிரிழந்துள்ளார்.
அதேவேளை யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த செவ்வாய்க்கிழமை மாத்திரம் 71 பேர் டெங்கு காய்ச்சலுக்கு உள்ளாகி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு காரணமாக இரண்டு விடுதிகள் புதிதாக திறக்கப்பட்டுள்ளதுடன், குழந்தை நோயாளர் விடுதி நிரம்பி உள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார். கடந்த திங்கட்கிழமை 11 மாத குழந்தை ஒன்று டெங்கு காய்ச்சலினால் உயிரிழந்திருந்ததுடன், கடந்த சனிக்கிழமை டெங்கு காய்ச்சலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவி ஒருவருக்கு வழங்கப்பட்ட மருந்து ஒவ்வாமை ஏற்பட்டமையால் , மாணவி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
யாழ். விசேட நிருபர்