முந்தல் பகுதியில் உள்ள மூன்று பாடசாலைகளில் உபகரணங்களை சேதப்படுத்தி , சுமார் 8 இலட்சம் பெறுமதியான பணம் மற்றும் உபகரணங்களை திருடிய குற்றச்சாட்டின் கீழ் மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், கைது செய்யப்பட்ட மாணவர்களால் திருடப்பட்டதாக கூறப்படும் மடிக் கணினி, மைக், வைபை ரவுட்டர், புரஜெக்டர் (Projector) உள்ளிட்ட உபகரணங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
முந்தல் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை உள்ளிட்ட இரண்டு ஆரம்ப பாடசாலைகளில் உபகரணங்களை சேதப்படுத்தி , உபகரணங்களையும் பணத்தையும் திருடியுள்ளமை முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி பாடசாலைகளில் நிர்வாக காரியாலயத்தில் இருந்த உபகரணங்களை சேதப்படுத்தி மாணவர்கள், 30 ஆயிரத்திற்கும் அதிக பணத்தை திருடி சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இவ்வாறு இரண்டு தடவைகள் குறித்த பாடசாலைகளுக்குள் புகுந்து பணத்தை திருடிய மாணவர்கள், பணம் கிடைக்காத போது அந்த பாடசாலைகளில் இருந்த உபகரணங்களை திருடிச் சென்றுள்ளனர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கற்பிட்டி தினகரன் விஷேட நிருபர்