யாழ். மன்னார் பிரதான வீதியில் சென்று கொண்டிருந்த கால்நடைகள் மீது அவ்வழியால் சென்ற தனியார் பஸ்ஸொன்று மீது மோதியதில் சில கால்நடைகள் இறந்தமையால் சாரதி தாக்குதலுக்கு உள்ளாகிய சம்பவம் மன்னார் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் நேற்று (25) பிற்பகல் 5.00 மணியளவில் மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவுப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக தெரியவருவதாவது:
மன்னார் யாழ்ப்பாணம் பிரதான வீதியில் பயணிகளுடன் யாழிலிருந்து மன்னாரை நோக்கி வந்த தனியார் போக்குவரத்து பஸ் வண்டி ஒன்று மன்னார் நாயாற்றுப் பகுதியில் வந்து கொண்டிருந்த போது அவ்வீதியால் கூட்டமாக வந்த கால்நடைகள் மீது மோதியதில் 8 கால்நடைகள் அவ்விடத்திலேயே இறந்துள்ளன.
இதனால் ஆத்திரமடைந்த கால்நடை பண்ணயாளர்கள் குறித்த பஸ் சாரதியை தாக்கியதுடன் பஸ்ஸூக்கும் சேதங்களை எற்படுத்தியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான குறித்த சாரதி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
இது தொடர்பாக அடம்பன் பொலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தனர்.
தலைமன்னார் விஷேட நிருபர்- வாஸ் கூஞ்ஞ