“இலங்கை தமிழரசுக் கட்சி ஆரம்பிக்கப்பட்டு 75ஆவது ஆண்டில் காலடி எடுத்து வைப்பதுடன், இந்தத் தருணத்தில் எமது உயரிய நோக்கான சுயாட்சியை நோக்கி நாம் தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டும்” என, அக்கட்சியின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
சுயாட்சி எனும் இலக்கை அடைவதற்காக 75ஆவது ஆண்டில் நாம் காலடி எடுத்து வைக்க வேண்டுமெனவும், அவர் தெரிவித்தார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைதீவு கிளைத் தலைவரும் முன்னாள் தவிசாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் கட்சிப் பணிமனையில் தமிழரசுக் கட்சியின் பிறந்தநாள் கொண்டாட்டம் கடந்த திங்கட்கிழமை (18) நடைபெற்றதுடன், பிறந்தநாள் கேக்கை வெட்டி வைத்து உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய சுமந்திரன் எம்.பி.,
“இலங்கையிலுள்ள தமிழர்களுக்காக வடக்கு, கிழக்கில் தமிழ் பேசும் மக்களுக்காக 75 ஆண்டுகளுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டதே இலங்கை தமிழரசுக் கட்சியாகும். எமது மக்கள் சுயாட்சியாக தமது கருமங்களை தாமே ஆற்றக்கூடிய வகையில் நாட்டில் ஏனைய இன மக்களுடன் சமமாக வாழ வேண்டுமென்ற இலக்கை நோக்கி இந்தக் கட்சி பயணிக்கிறது. ஆகையால், இதில் இணைந்து செயற்படுமாறும் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றேன்.
இப்பிறந்தநாள் கொண்டாட்டம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததென்பதுடன், காரைதீவு மண்ணில் இடம்பெறுவது பெருமைப்பட வேண்டிய விடயமாகும்” என்றார்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான தவராசா கலையரசன், இரா.சாணக்கியன், இளைஞர் அணியின் துணைத் தலைவர் அருள் நிதாஞ்சன், கட்சிப் பிரமுகர்கள் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.
காரைதீவு குறூப் நிருபர்