தற்போது நிலவிவரும் சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து மகாவலி கங்கை பெருக்கெடுத்துள்ளதால் திருகோணமலையின் கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மூன்று பிரதேசங்களுக்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
உப்பாறு கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட சோலைவெட்டுவான், காரைவெட்டுவான், மயிலப்பன்சேனை ஆகிய பிரதேசங்களுக்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன், இப்பிரதேசங்களிலுள்ள மக்கள் தமது அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியில் செல்ல முடியாது சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
இந்த மூன்று பிரதேசங்களுக்கான பிரதான போக்குவரத்து வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், கடந்த நான்கு நாட்களாக இந்த வீதிகள் வழியாக மிக வேகமாக வெள்ளநீர் பாய்ந்து ஓடுகின்றது. இதனால் இந்த மூன்று பிரதேசங்களுக்கான போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக, எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த மூன்று பிரதேசங்களிலும் சுமார் 90 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
கிண்ணியா மத்திய நிருபர்