யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியிலுள்ள பிரபல பாடசாலைக்கு அருகில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் இளைஞனொருவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது இரண்டு நாட்கள் பொலிஸ் காவலில் வைத்து விசாரணை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதற்கமைய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, பாடசாலைக்கு அருகிலுள்ள கடையொன்றில் ஹற்றன் பகுதியைச் சேர்ந்த இளைஞனொருவன் வேலை செய்து வந்துள்ளார்.
இளைஞன் கடையில் வைத்து போதைப்பொருள் வியாபாரத்திலும் ஈடுபட்டு வருவதாக நெல்லியடி பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அதனடிப்படையில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை இளைஞனை கைது செய்த பொலிஸார் அவரது உடைமையிலிருந்து 5 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை மீட்டிருந்தனர்.
விசாரணைகளின் பின்னர், பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் இளைஞனை ஆஜர்படுத்திய பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக சந்தேகநபரை இரண்டு நாள் பொலிஸ் காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதிக்குமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் சந்தேகநபரை பொலிஸ் காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதித்துள்ளது.
யாழ்.விசேட நிருபர்