இலங்கை ஒருநாள் அணித் தலைமை பொறுப்பை குசல் மெண்டிஸிடமும் டி20 தலைமைப் பொறுப்பை வனிந்து ஹசரங்கவிடமும் வழங்குவதற்கு இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு தீர்மானித்துள்ளது.
உபுல் தரங்க தலைமையிலான தேர்வுக் குழுவினர் நேற்று முன்தினம் (18) கூடியபோதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு குறித்து இலங்கை கிரிக்கெட் சபைக்கு அறிவிக்கப்படவுள்ளதோடு விளையாட்டுத் துறை அமைச்சரின் ஒப்புதலுக்காகவும் அனுப்பப்படவுள்ளது.
அண்மைக் காலத்தில் டெஸ்ட் போட்டிகள் இல்லாததன் காரணமாக டெஸ்ட் அணித் தலைவரை நியமிக்கும் முடிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எனினும் திமுத் கருணாரத்னவுக்கு பதில் தனஞ்சய டி சில்வாவிடம் டெஸ்ட் அணித் தலைமை பொறுப்பு வழங்கப்படவிருப்பதாக முன்னர் செய்தி வெளியாகி இருந்தது.
இதில் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களின் உப தலைவராக சரித் அசலங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன்படி இலங்கை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களுக்கான அணித் தலைமை பொறுப்பில் இருந்து தசுன் ஷானக்க விடுவிக்கப்பட்டுள்ளார். அண்மையில் இந்தியாவில் நடந்த ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டியில் தசுன் காயமடைந்ததை அடுத்து குசல் மெண்டிஸ் தலைமை பொறுப்பை வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.