தீர்வை வரி உள்ளிட்ட ஏனைய அரசாங்கத்துக்கு கிடைக்க வேண்டிய வரிகளை வழங்காமல், நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட மூன்றுகோடி ரூபா பெறுமதியான
ஒரு தொகை பொருட்களுடன் நான்கு பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக விமான நிலையப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
களனி, புத்தளம், கொலன்னாவை மற்றும் வீரகெட்டிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே, கைது செய்யப்பட்டனர். புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல்களுக்கு இணங்க மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே, இவர்களை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
விமான நிலையத்தில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட போதும், பொருட்களை சூசகமாக மறைத்து வைத்து அவற்றை விமான நிலையத்துக்கு வெளியே எடுத்துவர இவர்கள் முற்பட்டனர். இதன்போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
விசாரணைகளின் போது இந்நபர்கள் தொடர்ச்சியாக டுபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும்
சென்று சட்டவிரோதமாக இலங்கைக்கு பொருட்களை கொண்டுவந்துள்ளமை தெரியவந்துள்ளது.
பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ள பொருட்களில் மடிகணினிகள், அப்பிள் கையடக்க தொலைபேசிகள், கையடக்கத் தொலைபேசிகளின் உதிரிப்பாகங்கள், வெளிநாட்டு சிகரெட்டுக்கள், தங்க நகைகள், மதுபான வகைகள், கார்களுக்கான உதிரிப்பாகங்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
லோரன்ஸ் செல்வநாயகம்