கட்சியின் புதிய தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு
அனைத்து இனங்களையும் ஒன்றிணைத்து புதிய பயணமொன்றை இன்று முதல் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆரம்பிக்குமென கட்சியின் புதிய தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாடு கொழும்பில் சுகததாச உள்ளக அரங்கில் நேற்று (15) நடைபெற்றது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையிலேயே இந்த மாநாடு நேற்று பிற்பகல் ஆரம்பமானது.
இதன்போது பொதுஜன பெரமுன உறுப்பினர்களின் இணக்கப்பாட்டுடன் கட்சியின் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டார்.
மஹிந்த ராஜபக்ஷவின் பெயரை காமினி லொக்குகே முன்மொழிந்தார். அதனை முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ வழிமொழிந்தார்.
இந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் குறிப்பிடுகையில், நாட்டில் இனி நடைபெறும் எந்தவொரு தேர்தலையும் தாம் எதிர்கொள்ள தற்போது தயாராகவுள்ளதாகவும் தெரிவித்தார்.
நெருக்கடியான சூழ்நிலையில் ஆட்சி அதிகாரத்தை பொறுப்பேற்காமல் தப்பிச் சென்றவர்களிடம் நாட்டு மக்கள் ஆட்சி அதிகாரத்தை ஒப்படைக்க போவதில்லையெனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
இதேவேளை, எம் மீதான விமர்சனங்கள் ஒன்றும் புதிதல்ல எனவும் 2015ஆம் ஆண்டும் இவ்வாறான சேறு பூசல்களே காணப்பட்டன எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.