இலங்கைக்கான 48 மாத கால விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் முதலாவது மதிப்பாய்வுக்கு, சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை அனுமதி வழங்கியுள்ளது. இது, இரண்டாம் தவணைக் கடனாக சுமார் 337 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு கிடைப்பதற்கு வழிவகுத்துள்ளது. இந்தக்கடனுதவியை வழங்குவதற்கு கடந்த மார்ச் 20 இல், சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை ஒப்புதல்
அளித்திருந்ததது. இவ்வுதவி கிடைத்ததும் இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் வழங்கிய கடன்தொகை 670 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிக்கிறது.இதன் அடிப்படையில் முதற்கட்டமாக 330 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டன.இதன் பின்னர் கடந்த ஒக்டோபர் மாதம், சர்வதேச நாணய நிதியத்தின் நிதிக்குழு 48 மாத கால விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழான,முதலாவது மதிப்பாய்வில் இலங்கை அதிகாரிகளுடன் ஒப்பந்தம் எட்டப்பட்டது.
இதற்கான ஒப்புதலையே தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழு வழங்கியுள்ளது. இலங்கை தொடர்பான செயற்குழு விவாதத்தைத் தொடர்ந்து, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கென்ஜி ஒகாமுரா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:இலங்கையின் பொருளாதாரக் கொள்கை சீர்திருத்தங்கள் பலனைத் தரத் தொடங்கியுள்ளன.
விரைவான பணவீக்கம், குறிப்பிடத்தக்க வருவாய் அடிப்படையிலான நிதியைச் சரிசெய்தல் மற்றும் இருப்புக்களை உருவாக்குதல் ஆகியவற்றுடன் பொருளாதாரம் ஸ்திரத்தன்மைக்கான தற்காலிக அறிகுறிகள் தென்படுகின்றன.
ஜூன் இறுதிக்கான சகல செயல்திறன் அளவுகோல்களும் இலங்கையால் பூர்த்தி செய்யப்பட்டு,செலவு நிலுவைகள் மற்றும் வரி வருவாய் மீதான இலக்கைத் தவிர, சகல குறிகாட்டி இலக்குகளும் எட்டப்பட்டுள்ளன.
உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழு மற்றும் சீனாவின் ஏற்றுமதி – இறக்குமதி வங்கி ஆகியவற்றுடன் கடன் மறுசீரமைப்புக்கள் தொடர்பான இலங்கையின் உடன்படிக்கைகள், சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளுடன் ஒத்துப்போகின்றன.
இந்தநிலையில் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் சரியான நேரத்தில் அமுல்படுத்தப்படுகிறது.
வெளிநாட்டு தனியார் கடன் வழங்குநர்களுடன் ஒரு தீர்வை எட்டுவது, இலங்கையின் கடன் நிலைத்தன்மையை நடுத்தர காலத்திற்கு மீட்டெடுக்க உதவும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.