மட்டக்களப்பு இலுப்படிச்சேனைப் பிரதேசத்தில் பாரிய ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இலுப்படிச்சேனை வேப்பவெட்டுவான் பிரதான வீதியில் ஒன்று கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் – காட்டு யானை தொல்லைக்கு தீர்வு கோரி இலுப்படிச்சேனை வேப்பவெட்டுவான் பிரதான வீதியை வழிமறித்து சுமார் அரை மணி நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கையில் பதாகையை ஏந்தியவாறு யானைத் தொல்லைக்கு தீர்வு கோரி கோஷங்களை எழுப்பி பெருமளவிலானோர் குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதன் பின் வேப்பவெட்டுவான் இலுப்படிச்சேனை சந்தி வரை பேரணியாக சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள். சந்தியிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இலுப்படிச்சேனை பிரதான வீதியால் பேரணியாக சென்றுகொண்டிருந்தவேளை அவ்வழியால் வன ஜீவராசிகள் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் திடீரென வருகை தந்ததை அவதானித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அவரது வாகனத்தை வழிமறித்தனர்.
தமக்கான பிரச்சினைக்கு தீர்வு பெற்று தருமாறும் காட்டு யானை தொல்லையில் இருந்து தம்மை விடுவிக்குமாறும் கோரிக்கை விடுத்தனர்.
வேறு வேலையாக அவசரமாக செல்கிறோம் – வரும் போது உங்களை சந்திக்கிறோம் எனத்தெரிவித்து வனஜீவராசிகள் திணைக்கள வாகனம் புறப்பட்டது.
இதன்பின் இலுப்படிச்சேனை – வனஇலாகா அலுவலகம் வரை பேரணியாக சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள். வனஇலாகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் தமது பிரச்சினை தொடர்பில் பதில் கூற வேண்டும் என சுமார் ஒரு மணி நேரம் வாயில் கதவை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிகாரிகளுடன் கலந்துரையாடி தீர்வை பெற்றுத்தருவது தொடர்பாக பொலிஸாரின் வேண்டுகோளுக்கு அமைய ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.
மட்டக்களப்பு குறூப் நிருபர்