மலையக தமிழ் மக்கள் தொடர்பான விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியினால் நேற்று (06) இதற்கான நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
மலையகத் தமிழ் மக்களை இலங்கைச் சமூகத்துடன் முழுமையாக ஒன்றிணைப்பதை மேற்பார்வையிடுதல் குறித்து அறிக்கையிடுவதற்கான பொறுப்பும் வழங்கப்படுவதாக அவருக்கான நியமனக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.
மற்றும் நுவரெலியா, பதுளை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் உள்ள பிரச்சினைகளை ஆராய்தல் ஆகிய பொறுப்புகள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
பதுளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் பெருந்தோட்ட நிறுவனங்களுடனான நலன்புரி விடயங்கள், மகளிர் மேம்பாடு, சிறுவர் நலத்திட்டங்கள், தமிழ் பாடசாலைகள் உள்ளிட்ட ஏனைய பாடசாலைகள், சுகாதார சேவைகளை மேம்படுத்துதல் போன்ற விடயங்கள் தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் பதுளை மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவான வடிவேல் சுரேஷ், இலங்கை தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளராகவும் பதவி வகித்து வருகின்றார்.