மது வரித் திணைக்களத்தின் மாதாந்த வருமானம் ஒரு பில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளதாக திணைக்களத்தின் உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
மதுபான போத்தல்களில் போலி ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு விற்பனை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் கவனம் செலுத்தி, அவ்வாறு ஒட்டப்பட்ட போலி
ஸ்டிக்கர்களை சோதனையிட்டதால், இந்த வருமான அதிகரித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
திணைக்களத்தின் மாதாந்த வருமானம் ஒரு பில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளதாக தேசிய பொருளாதார மற்றும் பௌதீகத் திட்டங்கள் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவில், மேற்படி திணைக்களத்தின் அதிகாரி தெரிவித்தார்.
தேசிய பொருளாதார மற்றும் பௌதீகத் திட்டங்கள் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழு,பாராளுமன்றத்தில் கூடியது. இக்கூட்டம், குழுவின் தலைவர் மஹிந்தானந்த அலுத்கமகே எம் பி யின் தலைமையில் பாராளுமன்ற கூடிய போதே இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
தேசிய பொருளாதார மற்றும் பௌதீகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, ஜனாதிபதியிடம் கையளித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இலங்கை மதுவரித் திணைக்களம், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மற்றும் சுங்கம் ஆகிய நிறுவனங்களில் அதிகாரிகள் இக்குழுவின் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
இதன்போது பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டன. மதுவரித் திணைக்கள சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பிலும் மேற்படி குழு திணைக்களத்தின் அதிகாரிகளிடம் வினவியது.
மதுவரித் திணைக்களத்தின் அதிகரித்த வருமானத்தைத் தொடர்ந்தும் பேண வேண்டியதன் அவசியம் தொடர்பிலும், தொடர்ச்சியான சோதனைகளை அதிகரிப்பதன் மூலம் மது பானப் போத்தல்களில் போலி ஸ்டிக்கர்கள் ஒட்டப்படும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியும் என்றும் இக்குழு இதன்போது அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டியது.
(லோரன்ஸ் செல்வநாயகம்)