வடக்கு காசாவின் ஜபலியா அகதி முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாக பலஸ்தீன வெளியுறவு அமைச்சர் ரியாத் அல் மலிக்கி தெரிவித்துள்ளார்.
“ஜபலியாவில் கதூரா குடும்பத்தைச் சேர்ந்த 52 பேர் முழுமையாக கொல்லப்பட்டு அழிக்கப்பட்டுள்ளனர்” என்று கடந்த புதனன்று (22) லண்டனில் அரபு மற்றும் முஸ்லிம் அமைச்சர்கள் சந்திப்பு ஒன்றின்போது மலிக்கி தெரிவித்துள்ளார்.
“52 பேர்களின் பட்டியல் என்னிடம் உள்ளது. அவர்களில் பாட்டன் தொடக்கம் பேரக் குழந்தைகள் வரை முற்றாக அழிக்கப்பட்டுள்ளனர்” என்றும் அவர் கூறினார்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புகளுக்கு இடையே போர் நிறுத்த உடன்படிக்கை ஒன்று எட்டப்பட்ட நிலையில் நேற்று வரை அது அமுலுக்கு வரவில்லை. இந்நிலையில் கடந்த புதன்கிழமை காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 100க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.