பாகிஸ்தானின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் உமர் பாறூக் புர்கி மற்றும் அவரது ஆலோசகரான பைசல் அலிகான் ஆகியோர் கல்முனை மாநகர முன்னாள் பிரதிமுதல்வரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் ஸ்தாபகருமான ரஹ்மத் மன்சூரின் அழைப்பின் பேரில் இரண்டாவது தடவையாக கடந்த 6 ஆம் திகதி கல்முனைக்கு விஜயம் மேற்கொண்டு தேவையுடைய சில பயனாளர்களுக்கு வாழ்வாதார உதவியாக தையல் இயந்திரங்கள் வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வானது கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஒருங்கிணைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. வாழ்வாதாரங்களுக்கான உதவியாகவே தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன. மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற மக்களையும், அவர்களின் இடங்களையும் பார்வையிட்டு அவர்களது தேவைப்பாடுகளையும் உயர்ஸ்தானிகர் கேட்டறிந்து கொண்டார். உயர்ஸ்தானிகர் அங்கு உரையாற்றுகையில், அம்பாறை மாவட்டத்துக்கு இன்று விஜயம் மேற்கொள்வது இரண்டாவது தடவையாகும் என்றும், தாம் முதன்முதலாக மூன்று மாதங்களுக்கு முன்னர் ரஹ்மத் மன்சூர் விடுத்த அழைப்பின் பேரிலே அம்பாறை மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொண்டதாகவும் குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில் கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் அடையாளப்படுத்துகின்ற பயனாளர்களுக்கு பாகிஸ்தான் அரசாங்கத்தின் மூலம் தேவையான அனைத்துவித உதவிகளையும் அமைப்பின் ஸ்தாபகரும், முன்னாள் பிரதிமுதல்வருமான ரஹ்மத் மன்சூர் அவர்களின் வழிகாட்டலில் செய்யவிருப்பதாகவும் இதன்போது அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் 2.5 மில்லியன் ரூபா பெறுமதியான நீர்வசதிகள் அம்பாறை மாவட்டத்தின் பல பாகங்களுக்கும் பாகிஸ்தான் அரசாங்கத்தின் மூலம் உயர்ஸதானிகரினால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் பவுண்டேஷன் உறுப்பினர்கள், குறித்த பயனாளர்கள், நலன்விரும்பிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நூருல் ஹுதா உமர்