விவசாயிகளுக்கு பெரும்போக நெற்செய்கைக்குத் தேவையான உரத்தைக் கொள்வனவு செய்வதற்கு
முதலாம் கட்ட நிதியாக அரசாங்கம் நூறு கோடி ரூபாவை ஒதுக்கியுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிதிகள், அந்தந்த மாவட்ட செயலாளர் அலுவலக வைப்புக் கணக்குகளில் நேற்று வைப்பிலிடப்பட்டதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.நெற்பயிர்ச் செய்கை விவசாயிகளுக்கு 01 ஹெக்டெயாருக்கு 15,000 ரூபா வீதம், சகல விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இம்முறை பெரும்போகத்தில் 8 இலட்சம் ஹெக்டெயார் நிலப்பரப்பில் நெற்பயிர்ச்செய்கையை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந் நடவடிக்கைகளில் ஈடுபடும் அனைத்து விவசாயிகளுக்கும் மேற்படி நிவாரண நிதி வழங்கப்படும். இதற்கான நடிவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிவாரணங்களுக்காக அரசாங்கம் மொத்தமாக 1200 கோடி ரூபாவை செலவிடவுள்ளது.
(லோரன்ஸ் செல்வநாயகம்)