ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில், தங்கப்பதக்கத்தை வென்ற மாணவி தருஷி கருணாரத்ன நேற்று (05) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தார். கண்டி ஜனாதிபதி மாளிகையில் இச்சந்திப்பு இடம்பெற்றது.
இச்சந்திப்பில்,தடைகள போட்டிகளில் ஈடுபட்டுள்ள 76 மாணவர்களும் இணைந்திருந்தனர்.பாடசாலை அதிபர், தருஷியின் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் உட்பட 06 ஆசிரியர்களும் இதில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.21 வருடங்களின் பின்னர் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு தங்கப் பதக்கத்தை பெற்றுக் கொடுத்தமைக்காக
தருஷிக்கு பாராட்டுத் தெரிவித்த ஜனாதிபதி,சக மாணவிகளுடனும் சிநேகபூர்வமாக உரையாடினார். விளையாட்டுப் பாடசாலை கருத்திட்டத்தின் கீழ் 1995 ஆம் ஆண்டு கண்டி மாவட்ட விளையாட்டுப் பாடசாலை வலள ஏ. ரத்நாயக்க மத்திய கல்லூரியில் உருவாக்கப்பட்டது. இப்பாடசாலை விளையாட்டுத் துறையில் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் பல சாதனைகளை படைத்துள்ளது. தெற்காசிய கனிஷ்ட மட்டத்திலிருந்து ஒலிம்பிக் போட்டிகள் வரை சகல சர்வதேச போட்டிகளையும் பிரதிநிதித்துவப்படுத்திய விளையாட்டு வீரர்களை இப்பாடசாலை உருவாக்கியுள்ளது.
இந்த மாணவர்களின் தடகள விளையாட்டுத் திறன்களை மேம்படுத்துவதற்கு தேவையான வசதிகள் தொடர்பிலும் ஜனாதிபதி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.