நாம் 200 நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு
மலையக மக்களை தேசிய நீரோட்டத்தில் இணைத்துக் கொள்ளும் வேலைத் திட்டத்துக்கு அமைச்சரவையில் அங்கீகாரம் பெறப்பட்டிருக்கிறது. இதனை செயற்படுத்துவதற்கு பிரதமர் தினேஷ் குணவர்த்தன தலைமையில் விசேட குழு ஒன்றும் நியமிக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாம் 200 நிகழ்வில் அறிவித்தார். மலையகத்தில் கம்பனி நடைமுறைகள் இல்லாமல் செய்யப்படும்.
மலையக மக்களுக்கு பத்து பேர்ச் காணி உறுதியுடன் வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதன்போது உறுதியாக தெரிவித்தார்.
அத்துடன் கல்வித்துறையில் அனைவருக்கும் சமத்துவ வாய்ப்பை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருக்கிறது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இலங்கைக்கு இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் வருகை தந்து 200 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு நடைபெற்ற ‘நாம்200’ ஆண்டு விழா கொழும்பில் சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது.
இதன்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் இந்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் இணைந்து கொட்டகலை மவுண்ட் வெர்னன் தோட்ட கீழ் திம்பில வலயத்தில் 10 ஆயிரம்வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்துக்கு ஒன்லைன் ஊடாக அடிக்கல் நாட்டி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பியது மலையக மக்கள் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
மலையக மக்களினால் கொண்டு வரப்பட்ட பணத்தின் ஊடாக நாடு முன்னேறிய போதிலும், மலையக மக்களுக்கு பிரச்சினைகள் காணப்பட்டதாகவும் அவர் கூறினார்.
மலையக மக்களை இலங்கையின் தேசிய நீரோட்டத்துடன் முழுமையாக இணைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவிக்கின்றார்.
இதற்கான பிரதமர் தினேஷ் குணவர்த்தன தலைமமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவில் அமைச்சர் ஜீவன் தொண்டமானும் பிரதிநிதித்துவப்படுத்துவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
பெருந்தோட்ட முறைமை இல்லாது செய்யப்பட்டு, அனைவருக்கும் காணிகளை வழங்கும் திட்டமொன்று அமுல்படுத்தப்படவுள்ளதாக அவர் கூறினார்.
அத்துடன், மலையக மக்களுக்கு 10 பச்சர்ஸ் காணிகளை, காணி உறுதிப்பத்திரத்துடன் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மலையக மக்களுக்கு இந்திய அரசாங்கத்தினால் வழங்கிய வீட்டுத் திட்டத்தை போன்று, இலங்கை அரசாங்கமும் மலையக மக்களுக்கு வீட்டுத் திட்டத்தை அமைத்துக்கொடுக்க நிதி ஒதுக்கீடு செய்யப்படுமென ஜனாதிபதி தெரிவித்தார்.
இந்தியாவினால் இலங்கை மக்களுக்கு வழங்கப்பட்ட நிதி உதவிக்கு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நன்றி தெரிவித்துள்ளார்.