உலக வங்கியின் நிதி உதவியின் கீழ் விவசாய அமைச்சின் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் விவசாய நவீன செயற்திட்டத்தின் கீழ் ஏற்றுமதியை இலக்காகக்கொண்ட இராஜாங்கனை கதலி வாழைத் தோட்ட செயற்திட்டத்தை உலக வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளர் Anna Bjerde மற்றும் உலக வங்கியின் தென்காசியாவுக்கான உப தலைவர் மார்டின் ரைசர் (Martin Raiser) உலக வங்கியின் இலங்கை குழுவின் தலைவர் ஜோன் கைசர் உள்ளிட்ட உலக வங்கியின் பிரதிநிதிகள் குழுவினர் களப்பயணமொன்றை (29) மேற்கொண்டிருந்தனர்.இதன் போது விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர, நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் கலந்து கொண்டனர்.
உலக வங்கியின் பிரதிநிதிகள் அநுராதபுரம் இராஜாங்கனையில் மேற்கொண்டு வரும் கதலி வாழை செயற்திட்டத்தின் செயற்பாடுகள் தொடர்பில் பயிரிடப்பட்ட நிலத்திற்கு சென்று கண்காணித்ததுடன் பயனாளிகளை சந்தித்து அவர்களுடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடிய பின்னர் குறித்த செயற்திட்டத்தின் மூலம் வாழை ஏற்றுமதியியை விருத்தி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதுடன் ஏற்றுமதி மத்திய நிலையத்தினையும் பார்வையிட்டனர்.
குறித்த செயற்திட்டத்தின் மூலம் புதிய ஏற்றுமதி சந்தை வாய்ப்பை ஏற்படுத்துதல் தொழில் வாய்ப்பை ஏற்படுத்துதல் மற்றும் சமத்துவம் வலுவூட்டல் அதிகார மற்றும் வாய்ப்புக்களை உருவாக்குதல் ஆகியவைகளை விருத்தி செய்வதாக உலக வங்கியின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
இதன் போது விவசாய பிரிவு புதிய தொழில்நுட்ப பணிப்பாளர் கலாநிதி ரொஹான் விஜேகோன், செயற்திட்ட அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
அநுராதபுரம் மேற்கு தினகரன் நிருபர்