பங்களாதேஷுக்கு எதிரான உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியின்போது தோள்பட்டையில் அசௌகரியத்தை உணர்ந்த இலங்கை ஆரம்ப துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேராவின் உபாதை தீவிரம் இல்லை என்று இலங்கை கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமை (29) குவாஹாத்தியில் நடைபெற்ற இந்த பயிற்சிப் போட்டியில் 24 பந்துகளில் 34 ஓட்டங்களை பெற்றிருந்த குசல் பெரேராவின் இடது தோள் பட்டையில் வலி ஏற்பட்டதை அடுத்து அவர் துடுப்பாட்டத்தை தொடராது வெளியேறினார்.
எனினும் அவரது காயம் மோசமானதில்லை என்று இலங்கை அணி முகாமைத்துவம் கருதுவதோடு, காயத்தை மதிப்பீடு செய்வதற்காக ஸ்கேன் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இலங்கை அணி உலகக் கிண்ணத்தின் முதல் போட்டியில் எதிர்வரும் 07 ஆம் திகதி தென்னாபிரிக்க அணியை எதிர்கொள்ளவுள்ளது. இந்தப் போட்டிக்கு முன்னதாக அவர் மீண்டு வருவார் என்று அணி முகாமை எதிர்பார்க்கிறது. இந்நிலையில் இலங்கை அணி நாளை (03) குவாஹாத்தியில் நடைபெறும் இரண்டாவது பயிற்சிப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்ளவுள்ளது. இந்தப் போட்டியில் குசல் பெரேராவுக்கு ஒய்வு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அண்மைக் காலமாக தோள்பட்டை உபாதையால் பாதிக்கப்பட்ட குசல் பெரேரா ஓர் ஆண்டுக்கு முன்னரே பிரிட்டனில் சத்திரசிகிச்சை செய்துகொண்டார்.
தொடர்ந்து உடல் தகுதி பெற்று அண்மையிலேயே இலங்கை அணியில் இணைந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. உபாதை காரணமாக ஏற்கனவே முன்னணி சுழற்பந்து சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்க மற்றும் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மன்த சமீரவை இலங்கை இழந்துள்ளது. இந்நிலையில் உலகக் கிண்ணத்திற்கு சென்றிருக்கும் இலங்கை அணி இன்னும் 14 வீரர்களுடனேயே பயிற்சி போட்டியில் பங்கேற்றுள்ளது.
உபாதைக்கு உள்ளான சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்ஷன தனது உபாதையில் இருந்து மீண்டு இன்னும் இந்தியாவில் இலங்கை அணியுடன் இணையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருநாள் உலகக் கிண்ண போட்டி எதிர்வரும் ஒக்டோபர் 5 ஆம் திகதி தொடக்கம் நவம்பர் 19ஆம் திகதி வரை இந்தியாவில் நடைபெறவுள்ளது.