பதுளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்டு பதுளை- பசறை வீதி 7ஆவது மைல்கல் பகுதியில் அமைந்துள்ள யூரி தோட்ட ,மாப்பகல பிரிவில் உள்ள 5ஆம் இலக்க தொடர் லயன் குடியிருப்பில் உள்ள வீடொன்றில் நேற்று (25) மாலை மின்சார ஒழுக்கின் காரணமாக ஏற்பட்ட தீ பரவலின் காரணமாக தொடர் லயன் குடியிருப்பில் உள்ள வீடுகள் அனைத்து தீயினால் பலத்த சேதமடைந்துள்ளன.
இதன்காரணமாக குறித்த லயன் குடியிருப்பில் வசித்த 9 குடும்பங்களைச் சேர்ந்த 33 பேர் வீடு மற்றும் உடைமைகளை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பிரதேசத்திற்குப் பொறுப்பான கிராம சேவை உத்தியோகத்தர், தோட்ட முகாமையாளர், சமூர்த்தி உத்தியோகத்தர், இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் நிதிச் செயலாளர் ஆர். சலோபராஜ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் மாநில இயக்குநர் கே. முத்துகுமார் ஆகியோர் கலந்துரையாடி பாதிக்கப்பட்டவர்களை மாப்பாகல தமிழ் வித்தியாலயத்தில் தங்க வைத்து, அவர்களுக்குத் தேவையான சமைத்த உணவையும் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இத் தீப்பரவல் சம்பவத்தினால் உடைமைகளுக்கு ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்து பதுளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பசறை நிருபர்