பல கோரிக்கைகளை முன்வைத்து அதிவேக நெடுஞ்சாலை ஊழியர்கள் இன்று (22) ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் கடமையாற்றும் சுமார் 11,000 ஊழியர்களைக் கொண்ட குழு இந்த ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக அதிவேக நெடுஞ்சாலை ஊழியர் சங்கத்தின் தலைவர் யோஹான் ஹசித முனசிங்க தெரிவித்தார்.
அதிவேக நெடுஞ்சாலை கட்டண அறவீடு செய்யும் ஊழியர்கள் ஆரம்பித்துள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தால் டிக்கெட் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதற்கு தீர்வாக நெடுஞ்சாலைக் கடமைகளில் பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
குறிப்பாக வருடாந்த எஞ்சிய மருத்துவ விடுமுறைகளுக்கான கொடுப்பனவு, பதவி உயர்வு, சம்பள உயர்வு உள்ளிட்ட விடயங்களை முன்வைத்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.