நேரில் கண்ட சாட்சி; வித்தியா கொலையில் திருப்பம்

RSM
 
புங்குடுதீவு மாணவி கூட்டுவன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்படும் போது, அதனை நேரில் கண்ட சாட்சியம் இருப்பதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் (CID) பரபரப்பு தகவலை நீதிமன்றில் இன்று (18) தெரிவித்தனர். இந்த சாட்சியம் தொடர்பில் தாம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் சி.ஐ.டி. கூறியுள்ளது.
 
புங்குடுதீவு பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியா கூட்டு வன்புணர்வின் பின்னர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகள் ஊர்காவற்துறை நீதிமன்றில் நீதவான் ஏ.எம்.எம் ரியால் முன்னிலையில் நடைபெற்று வருகின்றது. இது தொடர்பான வழக்கு விசாரணைகள் இன்று (18) எடுத்துக்கொள்ளப்பட்ட போதே சி.ஐ.டியினர் மேற்படி பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளனர்.
 
சந்தேக நபர்கள் தரப்பில் ஆயராகியிருந்த சட்டத்தரணிகள் சந்தேக நபர்களுக்கு பிணை வழங்குமாறு மன்றில் பிணை விண்ணப்பம் செய்தனர், எனினும் கொலைச்சந்தேக நபர்களுக்கு பிணை வழங்குவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சி.ஐ.டி.யினர், பிணை வழங்க வேண்டாம் என நீதவானை கேட்டுக்கொண்டுள்ளனர்.
 
மேலும் குறித்த சந்தேகநபர்களது தொலைபேசி பதிவுகள் தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருகின்றதாகவும், கொலையை நேரில் பார்த்த சாட்சி ஒருவர் உள்ளதாக தெரிவித்த அவர்கள், அது தொடபில் தாம் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தனர்.
 
சந்தேகநபர்களது சார்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணிகளின் பிணை விண்ணப்பத்தை நிரகாரித்த நீதவான், எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் வழக்கு யாழ். நீதிமன்றத்திடம் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.  பிணை விண்ணப்பத்தை யாழ்.மேல் நீதிமன்றில் மேற்கொள்ள முடியும் எனவும் நீதவான் கூறியுள்ளார்.
 
இன்றைய வழக்கு விசாரணையின் போது வித்தியா சார்பில் எந்தவொரு சட்டத்தரணியும் ஆஜராகாத நிலையில், சந்தேகநபர்கள் சார்பில் சட்டத்தரணிகளான ஜோய் மகிழ் மகாதேவா, சரத் வல்கமுவ, அசேல டி சில்வா ஆகியோர் ஆஜராகி இருந்தனர்.
 
வழக்கு மீண்டும் எதிர்வரும் ஏப்ரல் 18ஆம் திகதி எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. வழக்கு முடிவுற்று சந்தேக நபர்கள் சிறைச்சாலை வாகனத்தில் ஏற்றி செல்லப்படும் போது, ஊடகங்கள் நடந்ததை எழுதுமாறு சுவிஸ்குமார் அறிவுறுத்தியுள்ளார்.
 
(யாழ்ப்பாணம் குறூப் நிருபர் - சுமித்தி தங்கராசா)

Add new comment

Or log in with...