Wednesday, November 11, 2015 - 1:45pm
தேசிய கொடியை உருவகப்படுத்தும் வகையிலான காற்தட்டி விற்பனையில் ஈடுபட்டவர் பொலிஸாரால் எச்சரிக்கப்பட்டார்.
கிழக்கு மாகாண கிராமிய கைத்தொழில் திணைக்களத்தின் தயாரிப்புகளை விற்பனை செய்யும் திருகோணமலை, உப்புவெளியிலுள்ள அத்திணைக்களத்தின் கீழ் இயங்கும் விற்பனைநிலையத்திலேயே இந்த காற்தட்டி விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டிருந்துள்ளது.
தும்புக் கயிற்றினால் வடிவமைக்கப்பட்ட இந்த காற்தட்டியை அவதானித்த, குறிப்பிட்ட இடத்தில் விசேட கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் ஒருவர், குறித்த விற்பனையில் ஈடுபட்டிருந்தவர்களை அழைத்து, பிழையை சுட்டிக்காட்டி தெளிவுபடுத்தியுள்ளார்.
அதனை அடுத்து குறித்த காற்தட்டி அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளது.
இதன்போது, தாம், அதனை சுவரில் மாட்டுவதற்காகவே வைத்திருந்ததாகவும், தவறுதலாக விற்பனை பகுதியில் வைக்கப்பட்டிருந்ததாகவும் அதிலிருந்த ஊழியர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை, பொலிஸ் உயிர் பாதுகாப்பு பிரிவின் பொறுப்பதிகாரியான உப பொலிஸ் பரிசோதகரான ஐ.ஜி.டப்ளியூ. லக்மாலினாலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Add new comment