தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கவும்

அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரி சம உரிமை அமைப்பினால், சத்தியாக்கிரகம் இடம்பெற்றது.
 
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் கூடிய அவர்கள சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டனர்.
 
நாடுமுழுவதிலுமுள்ள, பல்வேறு சிறைகளில், தற்போது உண்ணாவிரதத்தை ஆரம்பித்திருக்கும் தமிழ் கைதிகளின் உறவினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுமே இவ்வாறு சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டிருந்தனர்.
 
 
 
அதன் பின்னர், ஜனாதிபதி செயலகத்திற்கு நடந்து சென்றதுடன், அங்கு ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளர் எஸ்.ரீ. கொடிகாரவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
 
இதே வேளை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருக்கும் தமிழ் கைதிகள் இருவர் உடல்நலமின்மை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
ஏனைய கைதிகள் தொடர்ந்தும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருவதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ரோஹண புஸ்பகுமார தெரிவித்தார்.
 
கொழும்பு மெகசின் மற்றும் அநுராதபுரம், மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் ஆகிய சிறைச்சாலைகளில் விடுதலைப்புலி சந்தேகநபர்கள் இவ்வாறு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாக அவர் இதன்போது தெரிவித்தார்.
 
இவர்கள், தங்களை விடுவிக்குமாறு கோரி, நேற்றுமுன்தினம் (12) காலை உண்ணாவிரமொன்றை ஆரம்பித்திருந்தனர்.
 
201 கைதிகள் இவ்வாறு உண்ணாவிரதம் இருப்பதோடு, அவர்களில் 101 பேர், கொழும்பு மெகசினிலும் 30 பேர் அநுராதபுர சிறையிலும் ஏனையோர், யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, பதுளை, வெலிகடை, போகம்பறை, களுத்தறை, காலி, பொலன்னறுவை, மொணராகலை ஆகிய சிறைச்சாலைகளில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Add new comment

Or log in with...