தண்ணீர் கோரிய ஆர்ப்பாட்டத்தில் சலசலப்பு

3 பொலிஸாருக்கு காயம்
 
ஹம்பாந்தோட்டை பந்தகிரிய பகுதியிலுள்ள 5 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இணைந்து மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தில் குழப்பம் ஏற்பட்டு 3 பொலிஸார் காயமடைந்துள்ளனர்.
 
குறிப்பிட்ட கிராம மக்கள் தங்களுக்கு தூய குடிநீரை வழங்குமாறு கோரி, பல்லேமலல சந்தியில் தற்போது (12)  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
குறித்த சந்தியை மறித்து வாகனங்கள் செல்லாத வகையில் கடந்த 3 மணித்தியாலங்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த ஆர்ப்பாட்டக்காரர்களை அங்கிருந்து அகற்ற பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.
 
இதன்போது ஹம்பாந்தோட்டை - திஸ்ஸமஹாராமை பாதையிலிருந்து விலகுமாறு பொலிஸார் விடுத்த வேண்டுகோளை மதிக்காத ஆர்ப்பாட்டக்காரர்களை அங்கிருந்து அகற்ற முயன்றபோது ஏற்பட்ட குழப்பத்திலேயே பொலிஸார் மூவருக்கு காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதில் ஹம்பாந்தோட்டை பொலிஸ் தலைமையகத்தைச் சேர்ந்த பொலிஸாரும் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதன்போது சுமார் 2 கிலோமீற்றர்வரை வாகன நெரிசல் ஏற்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

There are 2 Comments

Add new comment

Or log in with...