மத்தளை விமான நிலையத்தில் நெல் களஞ்சியம் செய்ய மக்கள் எதிர்ப்பு!

ஹம்பாந்தோட்டை, மத்தளை சர்வதேச விமான நிலையத்தின் முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 
 
நெல்லை களஞ்சியப்படுத்தும் நோக்கில் மத்தளை விமான நிலைய வளாகத்தினுள் நுழைந்த நெல் மூடைகளை ஏற்றிச் சென்ற லொறிகளை மறித்தே குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகின்றது. 
 
கடந்த வாரம் மத்தளை விமான நிலையத்தை நெல் களஞ்சியசாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
அதன்படி முதலாவது தொகுதி லொறிகளே இன்று (02) விமான நிலைய வளாகத்தினுள் சென்றுள்ளது. 
 
இலங்கையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமாக கருதப்படும் மத்தளை விமான நிலையத்தின் குறித்த சில பகுதிகளிலேயே நெல் களஞ்சியம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
எவ்வாறாயினும் குறித்த விமான நிலையத்திற்கு வரும் விமானங்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
 
குறித்த விமான நிலையம் முழுவதையும் நெல் களஞ்சியமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுவதாக பிரதேசவாசிகள் அச்சம் கொண்டே இவ்வாறு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது என தெரிவிக்கப்படுகின்றது.

Add new comment

Or log in with...