Saturday, August 29, 2015 - 1:30pm
பல தசாப்தங்களாக வவுனியா, ஓமந்தை சோதனைச்சாவடியில் மேற்கொள்ளப்பட்டு வந்த பதிவு மற்றும் சோதனை நடவடிக்கைகள் இன்று (29) முதல் நிறுத்தப்பட்டுள்ளது.
சுமார் 20 ஆண்டு காலமாக இயங்கி வந்த இந்த சோதனைச்சாவடி இன்று முதல் எவ்வித சோதனை நடவடிக்கைகளும் இன்றி திறந்து விடப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட செயலாளர் பந்துல ஹரிஸ்சந்திர தெரிவித்தார்.
இதன் பிரகாரம், இன்று முதல் வழமைபோன்று ஏ-9 வீதியூடாக வடபகுதி நோக்கி மக்கள் சோதனைக்கு உட்படுத்தப்படாமல் பயணம் மேற்கொள்வதற்கான சந்தர்ப்பம் கிட்டியுள்ளதனால் அவ்வழியாக செல்லும் மக்கள் பெரும் மகிழ்ச்சியோடு தங்களது பயணத்தை மேற்கொள்வதை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது.
இந்த விடயம் குறித்து இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் குறிப்பிடுகையில், நாட்டில் தற்போது நிலவும் அமைதியான சூழ்நிலையைக் கவனத்திற்கொண்டு பாதுகாப்புத் தரப்பினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இதேவேளை, குறித்த சோதனைச் சாவடி அமைந்துள்ள பிரதேசம் பொது மக்களின் காணியாக காணப்படுவதை சுட்டிக்காட்டி காணி உரிமையாளர்களால் மனித உரிமை நிறுவனங்களில் மூலமாக வழக்கு தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Add new comment