அமைச்சுக்களை பொறுப்பேற்றுள்ள மூவரும் இன்று வெளிநாடு பயணம்

புதிய அரசாங்கத்தில் நேற்றைய தினம் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட அமைச்சர்கள் மங்கள சமரவீர, டி.எம்.சுவாமி நாதன், விஜேதாச ராஜபக்ஷ ஆகிய மூவரும் சர்வதேச மாநாடுகளில் கலந்து கொள்வதற் காக இன்று வெளிநாடு பயணமாகின்றனர்.

நேற்றுக்காலை மேற்படி மூன்று அமைச்சர்களும் புதிய தேசிய அரசாங்கத்தின் அமைச்சர்களாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

இதனையடுத்து இன்று அமைச்சர்கள் மூவரும் சுவிற்சர்லாந்துக்குப் பயணமாகவுள்ளனர். வெளி விவகார அமைச்சராகப் பதவியேற்று ள்ள மங்கள சமரவீர ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டிலும் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் அகதிகளுக்கான சர்வதேச மாநாட்டிலும் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ சர்வதேச தொழிலாளர் அமைப்பின் மாநாட்டிலும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இவர்கள் மூவரும் இன்று இணைந்தே சுவிற்சர்லாந்து நோக்கி பயணிக்கவுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன. (ஸ)

 

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...