கடமையில் இருந்த பொலிசார் ஒருவர் மீது இனம் தெரியாத நபர் ஒருவரால் தாக்குதல் நடத்தபட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வைத்திய பரிசோதனையின் பின் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டதோடு, அவரை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை (25) கிளிநொச்சி ஏ9 வீதி வைத்தியசாலைப் பகுதியில் பொலிசார் மற்றும் இளைஞர்களுக்கிடையில் முறுகல் நிலை ஏற்பட்டத்தை அடுத்து பெரும் பதற்றம் ஏற்ப்பட்டிருந்த நிலையில் அங்கு கடமையில் இருந்த பொலிசார் ஒருவர் மீது இனம் தெரியாத நபர் ஒருவரால் தாக்குதல் நடத்தபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன அடுத்து காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
பொலிசாரை தாக்கியதாக சந்தேகிக்கப்படும் தர்மபுரம் கட்டைக்காட்டுப் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரை தர்மபுரம் மற்றும் கிளிநொச்சிப் பொலிசார் இணைந்து நேற்று (26) பிற்பகல் கட்டைக்காட்டுப் பகுதியில் வைத்துக் கைது செய்துள்ளனர்.
(கிளிநொச்சி குறூப் நிருபா் - எம். தமிழ்செல்வன்)
Add new comment