அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆலையடிவேம்பு அகத்திக்குளம் பகுதியில் இன்று (16) பிற்பகல் இடம்பெற்ற தீ விபத்தில் வீடு ஒன்று முற்றாக தீக்கிரையாகியுள்ளது.
வீடு தீப்பற்றி எரிவதனை அவதானித்த அயலவர்கள் மற்றும் உறவினர்கள் இணைந்து நீரூற்றி தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தபோதும், வீட்டிற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
வீட்டு உரிமையாளர்கள் உறவினர் ஒருவருடைய வீட்டில் இடம் பெற்ற மதியபோசன விருந்துபசாரத்தில் கலந்து கொள்ள சென்றிருந்த போதே இவ் அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக குறித்த வீட்டின் உரிமையாளரான எரிக் ரோஸாயிரோ, பொலிசாரிடம் தெரிவித்தார்.
மின்சார ஒழுக்கினால் இவ்விபத்தி ஏற்பட்டிருக்கலாம் எனவும், இதனால் சுமார் 10 இலட்சம் ரூபா வரையில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
வீட்டின் கூரைப்பகுதியும் வீட்டினுள் வைக்கப்பட்டிருந்த பெறுமதியான பொருட்களும் முற்றாக நாசமடைந்த நிலையில் வீட்டின் சுவர்களிலும் தீயினால் பாரிய வெடிப்புகள் ஏற்பட்டுள்ளது.
இத்தீவிபத்து தொடர்பான சேதங்களை ஆலையடிவேம்பு பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர் ரி. சுபராஜ் பார்வையிட்டதுடன், அக்கரைப்பற்று பொலிஸார் இது குறித்தான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(வாச்சிக்குடா விசேட நிருபர்)
Add new comment