வித்தியா கொலை; வழக்கில் முன்னேற்றமில்லை - சந்தேகநபர் ஆதங்கம்

 

RSM

புங்குடுதீவு பாடசாலை மாணவி படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 12 சந்தேக நபர்களையும் எதிர்வரும் ஜுலை 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிவான் எம்.எல் றியாழ் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த வழக்கு இன்றைய தினம் (13) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன் போது கடந்த வழக்கு தவணையின் போது குறித்த மாணவி வசித்த இடத்திற்கு பொறுப்பாக இருக்கும் கிராம சேவகர் அங்குள்ள மக்கள் தொகை,கொலை நடைபெற்ற போது இருந்த மக்களின் எண்ணிக்கை, விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

அதற்கு அமைய இன்றைய வழக்கு தவணைக்கு பிரசன்னமாகிய ஜே-24 பகுதிக்கு பொறுப்பான செல்லத்துரை சிவா என அழைக்கப்படும் கிராமசேவகர் மன்றில் தோன்றி புங்குடுதீவு தென்கிழக்கு பகுதி தொடர்பிலான விபரங்களையும், மாணவி வித்தியா படுகொலை செய்யப்படுவதற்கு முன்னர் இருந்த 30 குடும்பங்களின் விபரங்களையும், படுகொலை நடைபெற்ற பின்னர் தற்போது உள்ள 31 குடும்ப விபரங்களையும், பின்னர் அப்பகுதியை விட்டு வெளியேறிய இரு குடும்பங்களின் விபரங்களையும் நீதிவான் முன் சமர்ப்பித்தார்.

பின்னர் மன்றில் ஆஜரான குற்றப்புலனாய்வு அதிகாரி குறித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் வழங்கியுள்ள வாக்குமூலங்களை விசாரணை செய்வதற்காக வழங்குவதற்கு ஏற்பாடு செய்து தருமாறு கேட்டார்.

இதன் போது நீதவான், சட்டமா அதிபரின் ஆலோசனை பெற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னர் இது தொடர்பில் ஆராய முடியும்; அதுவரை மன்றில் உள்ள சந்தேகநபர்களின் வாக்கு மூலங்களை  வழங்க முடியாது என மறுத்தார்.

இதன்போது  தனது கருத்தை தொடர்ந்த அவ்வதிகாரி குறித்த வாக்குமூலங்களை வழங்கினால் விசாரணைகளை துரித கதியில் முன்னெடுக்க முடியும் என நம்பிக்கை வெளியிட்டார்.

அத்துடன் கடந்த காலங்களில் நீதிமன்றத்திற்கு குற்றப்புலனாய்வு பிரிவினரால் சமர்ப்பிக்கப்பட வேண்டிய பெரும்பாலானா அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளதாகவும் ஒரு சில அறிக்கைகள் மிக விரைவில் சமர்ப்பிக்க முடியும் என மன்றில் கூறினார்.

இதேவேளை சந்தேகநபர்களின் ஒருவரான மகாலிங்கம் சசிதரன் என்பவர், தனது தாயாரின் வழக்கு தொடர்பான போக்கு கவலை அளிப்பதாக நீதவானிடம் குறிப்பிட்டார்.

அதற்கு பதிலளித்த நீதவான் எம்.எல் றியாழ் இவ்வழக்குடன் மேற்கூறிய உமது தாயாரின் வழக்கினை இணைக்க கூடாது. அது தொடர்பான விசாரணை உரிய முறையில் நடைபெறுகின்றது. எனவே அந்த வழக்கு தொடர்பாக இங்கே பேச முடியாது என கூறினார்.

குறித்த நபரது தாயார், வித்தியாவின் தாயை அச்சுறுத்தியதாக தெரிவித்து மற்றுமொரு வழக்கு இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்வழக்கு எதுவித முன்னேற்றமும் இன்றி செல்கின்றது. எனவே டி.என்.ஏ அறிக்கையை ஆராய்ந்தால் உண்மையான குற்றவாளி யார் என்பது தெரிந்து விடும் தானே என மற்றுமொரு சந்தேகநபரான சந்திரகாசன் என்பவர் கேட்டார்.

இதற்கு பதிலளித்த நீதவான் டி.என்.ஏ அறிக்கை சமர்ப்பிப்பது தொடர்பான நடவடிக்கை உரிய முறையில் இடம்பெறும் எனவே அதை பொறுத்திருந்து தான் பார்க்க முடியும் என கூறினார்.

குறித்த வழக்கில் மனுதாரர் சார்பாக சட்டத்தரணிகளான ரஞ்சித் குமார், சாலினி ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

இதேவேளை, வழமைக்கு மாறாக சந்தேகநபர்களுக்கு அதிக பாதுகாப்பு  வழங்கப்பட்டிருந்ததுடன் மோட்டார் சைக்கிள் படையணியும் பாதுகாப்புக்காக வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

(பாறுக் ஷிஹான்)

 


Add new comment

Or log in with...