Rizwan Segu Mohideen
றிஸ்வான் சேகு முகைதீன்
ஹம்பாந்தோட்டை, பல்லேமுல்ல பகுதியில் வசிக்கும் டி.எம். பிரேமதாச என்பவரை தாக்கியதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் தென்மாகாண சபையின் ஐ.ம.சு.மு. உறுப்பினர் டி.வி. உபுல் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
குறித்த தாக்குதல் தொடர்பில் இன்று (25) ஹம்பாந்தோட்டை பொலிஸில் சரணடைந்த தென்மாகாண சபை உறுப்பினரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு ரூபா 5 இலட்சம் கொண்ட சரீரப் பிணைகள் 02 இன் அடிப்படையில் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
கடந்த ஜூன் 15 ஆம் திகதி இடம்பெற்ற குறித்த தாக்குதலை, குறித்த சந்தேகநபர் உள்ளிட்ட குழுவினர் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படும் முறைப்பாட்டை அடுத்து, கடந்த ஜூன் 17 ஆம் திகதி தென் மாகாண சபை உறுப்பினர்களான லெஸ்லி ஜயலத் மற்றும் டிக்சன் டி சில்வா ஆகியோர் கைது செய்யப்பட்டு ஜூன் 22 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இதேவேளை ஜூன் 22 ஆம் திகதி, குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் சுந்த ஹெந்திக விஜிதானந்த என்பவர் சரணடைந்திருந்தார். இதனை அடுத்து குறித்த மூவரும் தலா ரூபா ஒரு இலட்சம் கொண்ட சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.
இது குறித்தான வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் 05 ஆம் திகதி எடுத்துக்கொளள்ப்படும் என நீதிமன்றம் இன்று (25) அறிவித்தது.
Add new comment