காதலையும் ஊடலையும் சுவைபட சொல்லும் அகப்பாடல்கள்

பழங்கால தமிழ் மக்களின் வாழ்வியல், ஒழுக்கம், ஒழுக்காறுகள், உரிமைகள் மற்றும் கடமைகள் ஆகியவற்றை சங்க இலக்கிய பாடல்கள் 'குன்றின்மேல் இல்ல விளக்கு' போல் தெள்ளத்தெளிவாக படம் பிடித்து காட்டுகிறது.

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐவகை நிலப்பரப்புகளில் வாழ்ந்த மக்களின் மரபுகளை தேனாக சங்க இலக்கியம் எடுத்துரைக்கிறது.

திணைகள் என்ற சொல்லிற்கு எண்ணற்ற பொருள் உண்டு. நிலம், மண், பூமி, ஒழுக்கம், நிகழ்விடம் போன்றவைகள் இருந்தாலும் நிலமும் பொழுதும் என்பனவற்றை அடிப்படையாக கொண்டே பிற பொருட்கள் விளக்கப்படுகின்றன.

ஐவகை திணைகளில் வாழ்ந்த மக்களின் உலகியல் சார்ந்த வாழ்வை அறம் என்றும், இல்லறம் சார்ந்த வாழ்வை புறம் என்றும் பகுக்கப்பட்டுள்ளது. எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் நூல்களில் அனைத்து பாடல்களும் அடக்கம்.

பழந்தமிழரின் வாழ்வில் திருமணத்திற்கு முந்தைய காதல், வாழ்வியல் நெறிமுறையாகவே இருந்துள்ளது. திருமணத்திற்கு முந்தைய 'காதல் வாழ்வை', களவொழுக்கம் என்றும், திருமணத்திற்கு பிறகு 'அவர்களின் இல்லற வாழ்வு', கற்பொழுக்கமாகவும் போற்றப்பட்டுள்ளது.

இவை சார்ந்த நிகழ்வுகளும், அதன் கதாப்பாத்திரங்களும் அகப்பாடல்கள் நமக்கு உணர்த்துகின்றது. காதலனும், காதலியும் தலைவன், தலைவி என்று வர்ணிக்கப்பட்டாலும் பாங்கனும் (நண்பன்), பாங்கியும் (தோழி) இல்லாமல் எவ்வாறு காதல் வளர்ப்பது?

முதல் சந்திப்பு

எதிர்பாராத சூழ்நிலையில் காதலன் காதலி சந்தித்தல், நல்ஊழின் ஏவலால் காதல் வயப்படுதல், இயற்கைப்புணர்ச்சி தெய்வப்புணர்ச்சி என்று கூறப்படுகிறது. அம்பு பட்ட யானை சினம் கொண்டு ஓடி வரும் பொழுது காதலன் காதலியை காப்பாற்றுகிறான். இருவருக்குள் காதல் மலர்கிறது. பெரும்பாலும் இவ்வகை காட்சிகள் குறுந்தொகையில் ஓவியங்களாக காண்பவர்களுக்கு புலப்படும்.

செவிலித்தாய் குறி கேட்டல்

குறி கூறும் குறத்தியிடம் தலைவியின் செயல்களில் மாற்றத்தை கண்ட செவிலித்தாய் இந்த மாற்றத்திற்கு காரணம் என்ன என்று வினவுகிறாள்.

குறத்தி குறி சொல்லும் முன் வழக்கமாக பாடும் மலைகளை பற்றிய பாடல்கள் அனைத்தையும் பாடுகிறாள். (தொடரும்)


Add new comment

Or log in with...