பீங்கானால் அடித்துக் கொலை; கணவருக்கு 10 வருட கடூழிய சிறை

பீங்கானால் அடித்துக் கொலை; கணவருக்கு 10 வருட கடூழிய சிறை-Wife Killed By Husband-10 Year Jail Sentenced-Gomarankadawala-Trincomalee

திருகோணமலை, கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மனைவிக்கு பீங்கானால்  அடித்து கொலை செய்த கணவருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மேல்நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இக்கட்டளையை  இன்று (25) பிறப்பித்துள்ளார்.

இவ்வாறு  10 வருட கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டவர் கோமரங்கடவல, அடம்பன பகுதியைச் சேர்ந்த உபசேனாகே நந்தசிறி (49) என தெரியவருகின்றது.

2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11ஆம் திகதி தனது இரண்டாவது மனைவியான அதே இடத்தைச் சேர்ந்த தயாவதி என்பவருடைய முதல் கணவரின் மகன் வீட்டுக்கு வருவதினால் அவரை வரவேண்டாம் என இரண்டாவது கணவரான  உபசேனாகே நந்தசிறி என்பவர் தனது மனைவியுடன் கூறியுள்ளார்.

இந்நிலையில் கணவருக்கும் மனைவிக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டுள்ளது. இதன்போது போதையில் இருந்த குறித்த நபர் சாப்பிட்டுக் கொண்டிருந்த வேளையில், அவரது மனைவி செருப்பால் அடித்ததாகவும் இதனை அடுத்து கோபம் கொண்ட கணவர் தான் சாப்பிட்டுக்கொண்டிருந்த பீங்கானை வீசியதாகவும் அது மனைவியின் கழுத்தில் பட்டு காயமடைந்து மரணமடைந்துள்ளதாக, வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபருக்கு எதிராக கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 09ஆம் திகதி சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் ஊடாக திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் குற்றப்பகர்வுபத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் குறித்த கொலை சம்பவம் தொடர்பில் இலங்கை தண்டனைச் சட்டக்கோவை பிரிவு 296 இற்கு அமைய, இவர் கொலை செய்யும் போது இவருடைய மனதில் எவ்வித கசப்புத் தன்மையும் இருக்கவில்லை எனவும் திடீர் கோபம் காரணமாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் குறித்த சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணியால் மன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

இதனையடுத்து  குறித்த குற்றத்திற்கான தண்டனை தீர்ப்பு திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனால் திறந்த நீதிமன்றில் அறிவிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் குறித்த குற்றவாளிக்கு 10 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கியதுடன் பத்தாயிரம் ரூபாய் தண்டப்பணம் நீதிமன்றிற்கு செலுத்துமாறும் அதனை செலுத்தத் தவறும் பட்சத்தில் மூன்று மாத கால கடூழிய சிறைத் தண்டனை வழங்குமாறும் திருகோணமலை மேல்நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கட்டளையிட்டார்.

(ரொட்டவெவ குறூப் நிருபர்)


Add new comment

Or log in with...