தேசவிடுதலைக்கு இன ஐக்கியமே அவசியமென்று பாடுபட்ட பெரியார்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அத்திவாரமாக அமைந்துள்ள பரமேஸ்வரா கல்லூரியின் நிறுவுனரும், சைவப் பெருவள்ளலாருமான சேர். பொன். இராமநாதனின் 90வது குருபூசை தினவிழா இன்றாகும் (நவம்பர் 21 ஆந் திகதி).

இலங்கையின் ஆன்மீகப் புலமைப் பாரம்பரியத்தை உலக அரங்குக்கு இட்டுச் சென்றவர்களுள் சேர்.பொன்.இராமநாதனுக்குத் தனியிடமுண்டு. அத்துடன், இலங்கையில் சைவத் தமிழ்ச் சமூகத்தின் அடையாளம், பண்பாடு, அரசியல், கல்வியியல், காலனித்துவ விடுதலை உள்ளிட்ட பல்வேறு பணிகளை முன்னெடுத்து அருந்தொண்டாற்றியவராகவும் திகழ்ந்தவர் அவர்.

அந்நியராட்சியின் கீழ் இலங்கை அடிமைப்பட்டிருந்த போது சைவமும் தமிழும் அழியாமல் காத்த பெரியார்களில் ஆறுமுகநாவலர் முதன்மையானவர். நாவலர் தனக்குப் பின்னர் சைவத் தமிழ்ச் சமூகத்துக்கு தலைமை தாங்கத் தேர்ந்தெடுத்த பெரியாரே சேர்.பொன்.இராமநாதன்.

பொன்னம்பல முதலியாருக்கும், செல்லாச்சி அம்மைக்கும் இரண்டாவது மகனாக இராமநாதன் பிறந்தார். கொழும்பு றோயல் கல்லூரி, சென்னை பிரெசிடென்சி கல்லூரிகளில் கற்று வழக்கறிஞராகத் திகழ்ந்தவர். காலனித்துவ அரசில் பல்வேறு பதவிகளை வகித்தவர். தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருதம் எனப் பன்மொழிப் புலமையுள்ளவராகவும் இனஐக்கியத்துக்காகப் பாடுபட்டு உழைத்தவராகவும் சேர்.பொன். இராமநாதன் அடையாளப்படுத்தப்படுகிறார். பௌத்த பிரம்மஞான சபையில் பொருளாளராகப் பதவி வகித்ததும் அதையொத்த சைவ வித்தியாவிருத்திச் சங்கத்தின் ஸ்தாபகத் தலைவராகத் திகழ்ந்ததும் இதற்குத் தக்க உதாரணங்களாகும்.

தேசத்தின் விடுதலைக்கு இன ஐக்கியத்தின் அவசியத்தை உணர்ந்து அதற்காகப் பாடுபட்டதோடு, அதற்காகவே வாழவும் விரும்பினார். சிங்களவரும் தமிழரும் இனவேறுபாடு அற்று வாழ வேண்டும் என்று விரும்பியவர் அவர். இரு இனத்தவராலும் தங்கள் தலைவராக ஏற்றுக் கொள்ளப்பட்ட தமிழ்த் தலைமை இவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சேர். பொன். இராமநாதன் அவர்களால் உருவாக்கப்பட்ட பரமேஸ்வரா கல்லூரி இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமாகப் பெருஞ் சிறப்புடன் மிளிர்கின்றது. இந்து நாகரிகம், சைவசித்தாந்தம், சமஸ்கிருதம் ஆகிய கற்கைப் புலங்களை உள்ளடக்கிய இந்துக் கற்கைகள் பீடத்தைக் கொண்ட இலங்கையின் தனித்துவம் மிக்கதொரு பல்கலைக்கழகமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் திகழ்கின்றமை சிறப்பானதாகும்.

சேர். பொன். இராமநாதன் அவர்கள் சொல்லுக்கும் செயலுக்கும் இடையில் வேறுபாடற்றவர். செல்வந்தர், கற்றவர், சட்டத்தரணி மற்றும் அரசியல் செல்வாக்கு, பதவி எனப் பல் அடையாளங்களைப் பெற்றிருந்தும் மக்களோடு மக்களாக நின்று எந்த எதிர்பார்ப்பும் இன்றி அவர்களுக்காகப் பெரும் பணியாற்றிய பெருமகன் அவர்.

சேர். பொன். இராமநாதன் ‘ஆணொடு பெண்ணும் சரிநிகர் சமானமாக’ வாழ வழிவகுத்தார். சுதேச சைவ மகளிர் தம் பண்பாட்டுச்சூழலில் கல்வி கற்க ஒரு பாடசாலையை நிறுவ விரும்பினார். அதன் பயனாக 1913ஆம் ஆண்டு ஜனவரி 20 இல் மருதனார்மடத்தில் மகளிர் கல்லூரி ஒன்றை நிறுவினார். அதுவே இந்நாளில் இராமநாதன் மகளிர் கல்லூரி எனலாயிற்று. பெண்களின் கல்வியறிவின் அவசியத்தை உணர்ந்து அவர் செயலாற்றினார்.

அன்றைய சூழ்நிலையில் பெண் ஆசிரியர்களைப் பெறுவதிலும் சிரமம் இருந்துள்ளது. இதனால் இராமநாதன் கல்லூரி வளாகத்திலேயே பெண்கள் ஆசிரியை பயிற்சிக் கலாசாலையையும் ஆரம்பித்துத் திறம்பட நடத்தியுள்ளார். இக்கலாசாலையில் இருந்து வந்தவரே சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி ஆவார்.

இன்று உலக அரங்கில் முதன்மையுற்றிருக்கும் யோகக்கலை பற்றிய பிரக்ஞைக்கு அன்றைக்கே முழு ஆதரவு நல்கியவர் சேர். பொன். இராமநாதன். யோகம், தியானம் என்பவற்றில் தலைசிறந்து விளங்கியவர். பாடசாலைக் கலைத்திட்டத்தில் அதனை இணைத்து ஆன்மீகப் பயிற்சியாக வழங்க வழி சமைத்தார்.

சேர். பொன். இராமநாதனின் ஞானக்குருவாக தஞ்சாவூரைச் சேர்ந்த அருட்பரானந்த சுவாமிகள் விளங்கினார். இவரின் அருட்பார்வையினால் இவர் தவயோகியாகவே மாறி விட்டார். பகவத்கீதை கூறும் கருமயோகத்தின் வழித்தடத்தில் இவரின் பிற்கால வாழ்க்கை அமைந்து விட்டது. தியான யோக சாதனைகளில் தமது நேரத்தைக் கழித்தார் இவரின் சீரிய யோக சிந்தனைகளை நினைவுபடுத்துவதற்காகவே இந்துக்கற்கைகள் பீட வரைபில் யோகநெறி ஒரு தனித்துறையாக அமைய சிபார்சு செய்யப்பட்டது.

சேர். பொன். இராமநாதன் சைவசித்தாந்த வித்தகராக விளங்கினார். அவரிடம் காணப்பட்ட சைவசித்தாந்த புலமையின் காரணமாகவே சைவ சித்தாந்த மகா சமாஜத்தின் முதல் மாநாட்டுக்கு (1906) இவர் தலைமை தாங்கிச் சிறப்பித்தார். சுவாமி விவேகானந்தர் வேதாந்த மெய்யியலை அமெரிக்கா, லண்டன் போன்ற நாடுகளில் பரப்புரை செய்தது போன்று சேர். பொன் இராமநாதன் சைவசித்தாந்த மெய்யியலை மேலைத்தேச நாடுகளில் பரப்புரை செய்த பெருமைக்குரியவராக விளங்கினார்.

இலங்கையில் சைவசித்தாந்தம் என்ற பெயரில் ஒருதுறை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மட்டும் அமைந்திருப்பது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கும், சேர். பொன். இராமநாதனுக்கும் பெருமை சேர்ப்பதாக அமைகின்றது.

சேர். பொன். இராமநாதன் பன்மொழிப் பாண்டித்தியம் உடையவராக விளங்கியதை அவரது நூலாக்கப் பணிகள், மொழி பெயர்ப்புப்பணிகள் எடுத்துக்காட்டுகின்றது. குறிப்பாக, தமிழ் இலக்கண வித்தகராகத் திகழ்ந்தமையை அவரின் செந்தமிழ் இலக்கணம் எனும் நூல் புலப்படுத்தி நிற்கின்றது. வடமொழியில் புலமைத்துவமாகத் திகழ்ந்ததை அவரின் பகவத்கீதா தமிழ் மொழிபெயர்ப்பும், விருத்தியுரையும் எனும் நூல் மூலம் அறியலாம்.

இலங்கையில் அமைந்து விளங்கும் திராவிடக் கட்டடக்கலை மரபில் அமைந்துள்ள கோயில்களுக்கு உதாரணமாக கொழும்பு கொச்சிக்கடையில் கட்டப்பட்ட பொன்னம்பலவாணேஸ்வரர் கோயில், யாழ்ப்பாணத்து பரமேஸ்வரா கல்லூரியில் காணப்படும் இராமநாதேஸ்வரம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

இலங்கையில் கொழும்பில் முற்றிலும் கருங்கல்லினால் சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ள ஒரேயொரு கோயில் பொன்னம்பலவாணேஸ்வரர் கோயில் ஆகும். இக்கோயில் 1856 இல் அருணாசலம் பொன்னம்பலம் முதலியாரால் கட்டப்பட்டது. பின் இவரின் மைந்தன் சேர். பொன். இராமநாதன் அவர்கள் சிறப்புற கட்டிமுடித்தார். இவர் தமிழகத்தில் முருகனுக்கு அமைத்த கோயிலாக கொடைக்கானல் குறிஞ்சியாண்டவர் கோயில் விளங்குகின்றது. இலங்கையில் மட்டுமன்றி தமிழகத்திலும் கோயில் அமைத்த சிறப்புக்குரியவராக சேர். பொன். இராமநாதன் விளங்குகின்றார்.

ஈழ மாதாவின் மாபெரும் புதல்வரான இப்பெரியார் 1930 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை இந்நாட்டினை உன்னத நிலையில் வைத்திட புரிந்த பகீரத பிரயத்தனங்களை இன்றைய தலைமுறை மறந்து விடலாகாது. சட்டநிரூபண சபைக்கு உள்ளேயும், வெளியேயும் நாட்டுக்காகவும், தமது மதத்துக்காகவும் அவர் நிலைநிறுத்திய சேவைச் சாதனைக்கு ஈடேயில்லை. இன்று வாழ்ந்து கொண்டிருப்போரிலும், வாழ்ந்து மறைந்து போனவரிலும், அவருக்கு இணைவு காண்பது இயலாது. அவர் சிறந்த நியாயவாதியாகவும், ஆற்றல் நிறைந்த சொற்போர் நிபுணராகவும், பண்பட்ட உன்னத நாவல்லோராகவும், திறமைசால் நிர்வாகியாகவும், இவை யாவிலும் மேலாக மிக்குயர்ந்த மெய்யியலாளராகவும், பிரமஞானியாகவும் விளங்கினார்.

சேர். பொன். இராமநாதன் அவர்களின் குருபூசை தினவிழா, நினைவுப் பேருரை மற்றும் சீமாட்டி லீலாவதி இராமநாதன் அவர்களின் நினைவுப் பேருரை என்பவை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வருடாவருடம் நிகழ்கின்றன. இவை யாவற்றுக்கும் மேலாக சேர். பொன். இராமநாதன் அவர்களின் நாமத்துடனேயே அவைக்காற்றுகைக் கலைகளுக்கான பீடம் அமையவிருப்பதும் வரவேற்கத்தக்க விடயமாகும்.

 

- கலாநிதி (திருமதி)
சுகந்தினி சிறிமுரளிதரன்,

பீடாதிபதி,
இந்துக்கற்கைகள் பீடம், யாழ். பல்கலைக்கழகம்

 

 


Add new comment

Or log in with...